திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.25 லட்சம் கட்டண ரசீது மோசடி.. தற்காலிக பெண் ஊழியர் அதிரடி சஸ்பெண்ட்!
ரசீது புத்தக விவரங்களுக்கும், கஜானாவில் செலுத்தப்பட்ட வரவுத் தொகைக்கும் இடையே உள்ள பெரும் முரண்பாடே இந்த மோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.இந்த நூதன மோசடி தணிக்கையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முறைகேட்டில் நேரடியாகத் தொடர்புடைய இந்து சமய அறநிலையத்துறையின் தற்காலிக பெண் ஊழியரான மேனகா என்பவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் செலுத்திய கட்டணத் தொகையில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த தற்காலிக பெண் ஊழியர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருச்செந்தூர் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு விரைவுத் தரிசனத்திற்காக பக்தர்களுக்கு 100 ரூபாய் கட்டண ரசீதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: அமைச்சர் தரிசனத்தில் ஆகம விதி மீறப்பட்டதா? திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் நீதிமன்றம் விளக்கம் கேட்பு!
தணிக்கையில் சிக்கிய ரூ.25 லட்சம் மோசடி:
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்த 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கும் பிரிவில் பெரும் கணக்கு தில்லுமுல்லு நடந்து வந்துள்ளது. தரிசனக் கட்டணமாக பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட பெரும் தொகையைக் கோயில் கணக்கில் முறையாகச் செலுத்தாமல், போலிக் கணக்குக் காட்டித் தனது சொந்தப் பயன்பாட்டிற்கு ஊழியர் சுருட்டியது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. கோயில் கணக்குகளை ஆய்வு செய்த அறநிலையத்துறையின் தணிக்கைப் பிரிவினர், இந்த தில்லுமுல்லு மூலம் சுமார் 25 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதை ஆதாரங்களுடன் கண்டுபிடித்துள்ளனர்.
பெண் ஊழியர் மேனகா மீது அதிரடி நடவடிக்கை:
ரசீது புத்தக விவரங்களுக்கும், கஜானாவில் செலுத்தப்பட்ட வரவுத் தொகைக்கும் இடையே உள்ள பெரும் முரண்பாடே இந்த மோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.இந்த நூதன மோசடி தணிக்கையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முறைகேட்டில் நேரடியாகத் தொடர்புடைய இந்து சமய அறநிலையத்துறையின் தற்காலிக பெண் ஊழியரான மேனகா என்பவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் தீவிர விசாரணை:
இந்தக் கட்டண ரசீது மோசடியில் மேனகாவுக்குத் துணையாக வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, அல்லது இதன் பின்னணியில் பெரிய நெட்வொர்க் ஏதேனும் செயல்படுகிறதா என்பது குறித்தும் அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்துள்ள இந்த 25 லட்சம் ரூபாய் மோசடி விவகாரம் முருக பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: மின்வாரியத்துக்கு ரூ.2.5 லட்சம் கோடி கடன் – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு தகவல்