காவல் நிலையத்தை சூறையாடிய கொலை குற்றவாளி.. தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை..
Crime: மதுரையில் வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலரை தாக்கிவிட்டு காவல் நிலையத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்திய கொலை குற்றவாளியான போராளி பிரபாகரனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில், ஜூன் 13 2025 அன்று காவல் நிலையத்தில் இருந்த தலைமை காவலரை அடையாளம் தெரியாத நபர் தாக்கி விட்டு காவல் நிலையத்தையும் சேதப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து காவல்துறை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் வி சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய பால்பாண்டி என்பவர் பாரா பணியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு பேர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து அவருடன் வாய் தகராறில் ஈடுபட்டதாகவும், அதனை தொடர்ந்து காவல் நிலையத்திலிருந்து கணினி உட்பட பிற பொருட்களை சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை குற்றவாளி காவல் நிலையத்தை சேதப்படுத்திய விவகாரம்:
மேலும், இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர்கள் மதுரை மாவட்டம் வி சத்திரப்பட்டியை சேர்ந்த முத்துவேல் என்பவரது மகன் பிரபாகரன் என்கிற போராளி பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் என தெரிய வந்துள்ளது. மேலும் பிரபாகரன் என்பவருடைய தந்தை முத்துவேல் என்பவரை திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் வழக்கு ஒன்றில் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தவறுதலாக புரிந்து கொண்டு இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு இரண்டு பேரும் தலைமறைவாக இருப்பதாகவும். இரண்டு பேரையும் பிடிப்பதற்கு உசிலம்பட்டி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் சத்திரப்பட்டி அருகே கண்மாய் கரையில் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக போராளி பிரபாகரன் என்கிற பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த சம்பவத்தை தொடர்ந்து திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னால் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அப்போது சம்பவ இடத்தை பார்வையிட முயன்ற போது காவல்துறையினர் அவரை தடுத்து கைது செய்தனர். முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைது செய்யப்பட்ட நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருகை தந்து ஆர் பி உதயகுமார் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று ரவுடிகள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு பணி வழங்க வேண்டிய போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை. மக்களுக்கும் காவல்துறைக்கும் சேர்த்து நாங்கள் பாதுகாப்பு வழங்குகிறோம். இது தமிழ்நாடா சுடுகாடா என்றே தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்