PMK Internal Conflict: கட்சியே முக்கியம்! பதவியல்ல.. பாமக இளைஞர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய முகுந்தன்..!
PMK Mugunthan Resigns: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து வேறுபாட்டின் காரணமாக, பாமக இளைஞர் அணித் தலைவர் முகுந்தன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராமதாஸ், அன்புமணியின் செயல்பாடுகள் கட்சி வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், பாஜக கூட்டணி குறித்த அழுத்தம் குறித்தும் குற்றம் சாட்டினார். இதனால் ஏற்பட்ட உட்கட்சிப் பதற்றத்தின் விளைவாகவே முகுந்தன் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.

சென்னை, மே 29: பாண்டிச்சேரியில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் (Pattali Makkal Katchi) பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞர் சங்க தலைவராக முகுந்தனை (Mugunthan) நியமித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) மேடையிலேயே குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு எத்தனை பதவிகளை கொடுப்பது, அதற்கு கட்சிகளில் எத்தனையோ பேர் உழைத்தவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு இளைஞர் சங்க தலைவர் பதவியை கொடுக்கலாமே என முனகினார். அன்றுமுதல் இன்று வரை பாமகவில் தந்தை ராமதாஸூம், மகன் அன்புமணி ராமதஸூக்கும் இடையே உட்கட்சி மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று அதாவது 2025 மே 29ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து தனது மகன் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதைதொடர்ந்து, பாமகவின் இளைஞர் சங்க தலைவர் முகுந்தன் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்று கூறி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
பதவியில் இருந்து விலகல்:
பாமக இளைஞர் சங்கத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிவிப்பு.
தனது விலகல் கடிதத்தை அன்புமணிக்கு அனுப்பியுள்ளார் முகுந்தன். #AnbumaniRamadoss #Ramadoss #PMK #mukundhan #TamilNadu
— மனோஜ் சௌந்திரராஜன் (@manoj_1001) May 29, 2025




இதுதொடர்பாக முகுந்தன் வெளியிட்ட அறிக்கையில், “ பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி நியமிக்கப்பட்டேன். இப்போது அந்த பொறுப்பிலிருந்து எனது சொந்த காரணங்களுக்காக விலகி கொள்கிறேன். மருத்துவர் ராமதாஸ் அய்யா தான் என்னென்றும் எனது குலதெய்வம், மருத்துவர் அன்புமணி ராமதாஸ்தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வு கொண்டு தொடர்ந்து கட்சியில் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
ராமதாஸின் மகள்வழிப் பேரன்தான் முகுந்தன் பரசுராமன். ராமதாஸின் மூத்த மகளும், அன்புமணி ராமதாஸின் அக்காவான காந்திமதி – பரசுராமன் தம்பதியினரின் மகன்தான் இந்த முகுந்தன் பரசுராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது என்ன..?
செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறுகையில், “பாமக கௌரவ தலைவர் ஜிகே மணியின் மகன் தமிழ்குமரன், முகுந்தன் ஆகியோரை கட்சி பொறுப்பில் நியமிக்கப்பட்டது என் மகன் அன்புமணி ராமதாஸூக்கு பிடிக்கவில்லை. இதுபோன்று செயல்பட்டு அவர் கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டனிக்கு வைக்காவிட்டால் நீங்கள் எனக்கு கொள்ளிதான் வைக்க வேண்டும் என்று அன்புமணி என்னை மிரட்டினார். தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி வைக்க சொல்லி சௌமியாவும், அன்புமணியும் காலில் விழுந்து கெஞ்சினர். அடுத்த நாளை காலையில் என் வீட்டு முன், பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷம் ஒலித்தது” என்று தெரிவித்தார். இந்தநிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையிலான கருத்து மோதல் காரணமாக முகுந்தன் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.