அவரது அம்மாவின் மீதே பாட்டிலை வீசினார்.. அன்புமணி மீது ராமதாஸ் குற்றச்சாட்டு!
Ramadoss Accused Anbumani Ramadoss | கட்சி பிரச்னைகளின் போது அன்புமணி ராமதாஸ் அவரது தாய் மீதே பாட்டிலை வீசி எறிந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் அன்புமணி ராமதாஸ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விழுப்புரம், மே 29 : பாட்டாளி மக்கள் கட்சியில் (PMK – Pattali Makkal Katchi) உட்கட்சி பூசல் நீடித்து வரும் நிலையில், ராமதாஸ் தனது மகன் அன்புமனி ராமதாஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அது குறித்து கூறிய அவர், கட்சி பிரச்னைகள் பற்றி பேசிய போது அவரது அம்மாவின் மீதே பாட்டிலை வீசி எறிந்தார். நல்லவேளை பாட்டில் அவர் மீது படவில்லை என்று அன்புமணி ராமதாஸ், மீது ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அன்புமணி ராமதாஸ் அநாகரிகமாக நடந்துக்கொள்வதாகவும அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பாமக உட்கட்சி பூசல் – விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனும் பாமக முன்னாள் தலைவருமான அனுபுமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டது கட்சியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நான் என்ன தவறு செய்தேன், என்னை ஏன் பதவியிறக்கம் செய்தார்கள், நான் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் என்று சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். இந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று (மே 29, 2025) செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், அன்புமணி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ராமதாஸ்
இன்று (மே 29, 2025) தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், நான் என்ன குற்றம் செய்தேன் ஏன் எனக்கு இந்த பதியிறக்கம் என்று அன்புமணி சொல்லி இருக்கிறார். இது மக்களையும் கட்சி தலைவர்களையும் திசை திருப்பும் முயற்சியாகும். செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சியினரிடமும் அனுதாபம் பெற முயற்சிக்கிறார் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தவறு செய்தது அன்புமணி அல்ல. எனது சக்தியை மீறி அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கி நான் தான் தவறு செய்தேன் என்று கூறியுள்ளார். தவறான ஆட்டத்தை ஆரம்பித்தது அன்புமணிதான் என்று கூறியுள்ளார்.
கட்டுப்பாடோடு நடத்தி வந்த கட்சிக்கு கலங்கத்தை அன்புமணி ஏற்படுத்திவிட்டார். கட்சியின் வளர்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்து வந்தார். எதிர்பாராத வகையில் வளர்த்த கடாவே மார்பில் வீறுகொண்டு பாய்கிறது என்று அவர் கூறியுள்ளார்.