“மக்கள் கருத்துப் பெட்டி”.. தேர்தல் அறிக்கை தயாரிக்க தவெக புதிய யோசனை..
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கியமான அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை நேரிடையாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை சேகரிப்பதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாகத் தெரிவிப்பதற்காக ஒரு 'மக்கள் கருத்துப் பெட்டி' அமைக்கப்பட உள்ளது.
சென்னை, ஜனவரி 30: தவெக தனது தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கான ஆலோசனைப் பெட்டிகளை வைத்து பொதுமக்களின் கருத்தை அறிய முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக மக்களின் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் குறிக்கோளாகக் கொண்டு, மக்களுக்கான தேர்தல் அறிக்கை மக்களிடமிருந்தே உருவாக வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தவெக தனது தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறது.
இதையும் படிக்க : 2026 சட்டமன்ற தேர்தல்: திமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக.. எத்தனை இடங்கள் தெரியுமா?
பிப்.1ம் தேதி சுற்றுப்பயணம் தொடக்கம்:
மேலும், கூடுதல் தகவல்களைப் பெறவும், பொதுமக்களின் தேவைகள் குறித்த முழுமையான விவரங்களை சேகரிக்கவும் தேர்தல் அறிக்கைக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். அதன்படி, தேர்தல் அறிக்கைக் குழு பிப்ரவரி 1-ம் தேதி மதுரைக்கு வருகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கூட்டம் அங்கு நடத்தப்படும்.
திருச்சி முதல் சென்னை வரை:
கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடலோர பகுதியில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை (இணைப்பு), ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பிப்ரவரி 4-ம் தேதி கடலூரில் கூட்டம் நடைபெறுகிறது. மேற்கு மண்டலத்தில் (கொங்கு மண்டலம்), கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பிப்ரவரி 7-ம் தேதி கோவையில் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய மண்டலத்தில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிப்ரவரி 9ம் தேதி திருச்சிராப்பள்ளியில் கூட்டம் நடைபெறுகிறது. வடக்கு மண்டலத்தில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், வரும், 11ம் தேதி, சென்னையில் கூட்டம் நடக்கிறது.
மக்கள் ஆலோசனைப் பெட்டி:
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கியமான அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை நேரிடையாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை சேகரிப்பதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாகத் தெரிவிப்பதற்காக ஒரு ‘மக்கள் கருத்துப் பெட்டி’ அமைக்கப்பட வேண்டும். சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் வழியாகவும், டிஜிட்டல் முறைகளில் கருத்துக்கள் சேகரிக்கப்பட வேண்டும்.
இதையும் படிக்க : நிர்வாகிகளுடன் ஆலோசனை.. யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கும் ஓபிஎஸ்
இந்தக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுமக்களை, விவசாய சங்க உறுப்பினர்களை, நெசவாளர்களை, மீனவர்களை, மாணவர்களை, இளைஞர்களை மற்றும் பல்வேறு தொழில்முறை அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைச் சேகரிக்க வேண்டும். அவர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தும் வகையில் ஒரு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் இந்தக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.