கோவையில் இரு வடமாநில தொழிலாளிக்கு கத்திக்குத்து….இரு இளைஞர்கள் வெறிச்செயல்!
Coimbatore Crime: கோவை மாவட்டத்தில் தமிழ் பேச தெரியாத வட மாநில தொழிலாளர்கள் இருவர் மீது கத்திக் குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் நடந்த 20 நாள்கள் ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் கோவிந்த கோன்ட் ஆகிய இருவரும், கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக இவர்கள் அந்த பகுதியில் தங்கி உள்ளனர். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி ராகேஷ் மற்றும் கோவிந்த கோன்ட் அந்தப் பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் டீ குடிப்பதற்காக சென்றனர். அப்போது, பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த இருவர், ராகேஷ் மற்றும் கோவிந்த கோன்ட்டிடம் பேசியதாக தெரிகிறது. அப்போது, அவர்களுக்கு தமிழ் தெரியாது என்பதால் ஹிந்தியில் பதில் அளித்துள்ளனர். மேலும், அருகிலுள்ள நிறுவனத்தை காண்பித்து அங்கு பணி செய்து வருவதாக சைகை மொழியில் கூறியுள்ளனர்.
வடமாநில இளைஞர்கள் மீது கத்திக்குத்து
அப்போது, திடீரென அந்த தமிழ் பேசும் இரு இளைஞர்கள், வட மாநில நபர்களிடம் ஆபாசமாக பேசியதுடன் தாக்கி கத்தியால் குத்தினர். இதனால், அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த நபர்கள் அந்த இளைஞர்களிடம் இருந்து வட மாநில இளைஞர்களை மீட்டனர். இதனால் அந்த பகுதி களவரம் போல காட்சியளித்தது. உடனே, தமிழ் பேசும் இரு இளைஞர்கள் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.




மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்கள்
கத்திக் குத்தில் பலத்த காயமடைந்த ராகேஷ் மற்றும் கோவிந்த கோன்ட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்ட இரு தமிழக இளைஞர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்று 20 நாட்களுக்கு மேலாகியும், அந்த நபர்கள் கைது செய்யப்படவில்லை.
சமூகவலைதளங்களில் பரவி வரும் கத்திக் குத்து சம்பவம்
இந்த நிலையில், இந்த சம்பவம் அந்த பேக்கரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோவை கருமத்தம்பட்டி போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த கத்தி குத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருத்தணியில் வெளிமாநிலத்தவருக்கு கத்திக்குத்து
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் இருந்து திருத்தணிக்கு வந்த ரயிலில் பயணித்த மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞரை நான்கு சிறுவர்கள் கத்தியால் வெட்டி, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில், நான்கு சிறுவர்களும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தமிழகத்தில் முதன் முறையாக சோலார் படகு சேவை…எங்கு தெரியுமா… குஷியில் சுற்றுலா பயணிகள்!