Happy New Year 2026: புத்தாண்டை கொண்டாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்ற மக்கள்!
Happy New Year 2026: சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, புதுச்சேரி என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. வண்ண, வண்ண பலூன்களை பறக்கவிட்டு, கேக் வெட்டியும், ஊட்டியும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

2025-ம் ஆண்டு, நேற்றோடு கடந்து சென்றுவிட்டது. இன்று 2026 உதயமாகியிருக்கிறது. இந்தப் புதிய 2026ஆம் ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்ற விருப்பத்துடன் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். சென்னையில் கொட்டும் மழையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் திரண்டு புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். மால்கள், பூங்காக்களிலும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர்.

நேற்று மாலை 6 மணி முதலே சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நகரின் முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்யப்பட்டு சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணைகளும் நடந்தது. இதுதவிர 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டனர். இதோடு 30 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் ரேஸ் நடத்தவிடாமல் தடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னையில் மெரினா, பெசண்ட் நகர் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டதையொட்டி மாலை முதலே இந்த பகுதியில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. புத்தாண்டை வரவேற்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரே இடத்தில் திரண்டனர். சரியாக 12 மணி ஆனதும் மணிக்கூண்டில் ஒலி எழுப்ப அனைவரும் ஒன்று சேர்ந்து 'ஹேப்பி நியூ இயர்' என்று உற்சாகமாக குரல் எழுப்பியபடியும், கைகளை குலுக்கியும் புத்தாண்டை வரவேற்றனர். வண்ண, வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். இதேபோல, விதவிதமான வகைகளில் கேக்குகளை கொண்டுவந்து அதை வெட்டி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.

அருகில் இருந்தவர்களுக்கும் கேக்குகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதனால், மெரினா காமராஜர் சாலையில் உற்சாகம் கரைபுரண்டோடியது. இதேபோல, மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் மெரினா காமராஜர் சாலையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே லேசான சாரல் மழை பொழிந்து, மக்களின் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம், சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.