AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புத்தாண்டு அன்று மழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

2026 ஆம் ஆண்டு துவங்கவுள்ள நிலையில் உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு அன்று மழை பெய்யுமா என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

புத்தாண்டு அன்று மழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 31 Dec 2025 18:50 PM IST

சென்னை, டிசம்பர் 31: 2026 ஆம் ஆண்டு துவங்கவுள்ள நிலையில் உலகம் முழுக்க மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு (New Year) தினத்தன்று மழை பெய்யுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது  இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விரிவான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இலங்கை கடற்கரைக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கீழடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வரும் நாட்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

புத்தாண்டு அன்று மழை பெய்யுமா?

நாளை ஜனவரி 1, 2026 அன்று, அதாவது புத்தாண்டு தினத்தன்று, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும். இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : புத்தாண்டு…மதுக்கடையில் குவிந்துள்ள மதுபானங்கள்…மது பிரியர்களே என்ஜாய்!

ஜனவரி 2, 2026 அன்று தென் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மிதமான மழையும், வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மழையும் பெய்யக்கூடும். ஜனவரி 3, 2026 அன்று தென் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் நிலையில், வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

ஜனவரி 4, 2026 முதல் ஜனவரி 6, 2026 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என்றும், அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப நிலை எப்படி இருக்கும்?

வெப்பநிலை குறித்து வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்பில்,  ஜனவரி 02, 2026 முதல் ஜனவரி 4, 2026 வரை சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சாதாரணத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், ஜனவரி 01, 2026 அன்று வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : 2026 புத்தாண்டு வாழ்த்து எப்படி அனுப்பலாம்… நண்பர்கள்-உறவினர்களுக்கு இப்படி அனுப்பலாம்!

மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், ஜனவரி 1, 2026 அன்று தமிழ்நாடு கடலோர பகுதிகளுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனவரி 2, 2026 முதல் ஜனவரி 04, 2026 வரை தென் தமிழ்நாடு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடற்பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில், சில நேரங்களில் 65 கிலோமீட்டர் வரை வீசக்கூடிய பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. இதனால், அந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில், புத்தாண்டு தினத்தன்று தமிழ்நாட்டின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us