Seeman’s Palm Tree Climb: பனை ஏறி கள் இறக்கிய சீமான்.. அடுத்த போராட்டம் குறித்தும் பகிரங்க அறிவிப்பு!

Naam Tamilar Katchi's Toddy Protest: தமிழகத்தில் பனைமரத்தில் கள் இறக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்செந்தூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்டார். பனை மரத்தில் ஏறி கள் இறக்கி, தடையை கண்டித்தார். இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, வனத்தில் மேய்ச்சலுக்கு உள்ள தடையையும் எதிர்த்து, ஆடு மாடுகளின் மாநாட்டை நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

Seemans Palm Tree Climb: பனை ஏறி கள் இறக்கிய சீமான்.. அடுத்த போராட்டம் குறித்தும் பகிரங்க அறிவிப்பு!

சீமான் பனை ஏறிய காட்சிகள்

Published: 

15 Jun 2025 15:42 PM

திருச்செந்தூர், ஜூன் 15: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் (Naam Tamilar Katchi) சீமான் திருச்செந்தூர் அருகே கள் இறக்கும் போராட்டத்தில் பங்கேற்று பனைமரம் ஏறி, கள் இறக்கினார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் பனை மற்றும் தென்னங்கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், திருச்செந்தூர் (Thiruchendur) அருகே பெரியதாழையில் பனைமர தொழிலாளர்களுடன் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) பங்கேற்றது மட்டுமின்றி, கள் இறக்க விதித்த தடையை நீக்க வேண்டும் என்று கூறி, பனை மரத்தில் ஏறி கள் இறக்கினார்.

போராட்டம் அறிவிப்பு:

2025 ஜூன் 15ம் தேதியான இன்று நாம் தமிழர் கட்சியினர் சார்பில் பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கமும், தமிழ்நாடு கள் இயக்கமும் இணைந்து நடத்திய இந்த போராட்டத்தில் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு, கடந்த சில நாட்களாகவே சீமான் பனைமரம் ஏறி பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், இன்றைய நாளில் ‘பனை மரத்தில் ஏற வேண்டும்’ என்று நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கூறியும் சீமான், ‘கள் இறக்கும் போராட்டத்தில் நான் பங்கேற்றுள்ளதால், பனைமரம் ஏறுவேன், யாரும் பயப்பட வேண்டாம்’ என்று தெரிவித்தது மட்டுமின்றி, பனை மரமும் ஏறி கள் இறக்கினார்.

ஆடு, மாடு மேய்க்க தடையா..?

தூத்துக்குடியில் பனைமரை ஏறும் போராட்டத்திற்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “வனத்தில் மேச்சலுக்கு தடை விதிப்பதை எதிர்த்து, 2025 ஜூலை 10ம் தேதி ஆடு, மாடுகளின் மாநாடு நடத்தப்போகிறேன். அதற்கும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், தொடர்ந்து 3,000 ஆடு, மாடுகளை திரட்டிக்கொண்டு நானே மேய்க்கச் செல்வேன்.” என்று தெரிவித்தார்.

பனை மரத்தில் இறக்கி வந்த கள்ளை அனைவருக்கும் சீமான் வழங்கியது மட்டுமின்றி, தானும் குடித்தார். இந்த போராட்டத்தின்போது, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்ளிட்டோரும் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். சீமான் பனையேறும்போதும் அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் ’கள் எங்கள் உரிமை, கள் எங்கள் உணவு’ என்று ஒருமித்த கோஷங்களை எழுப்பினர்.