நீலகிரியை விடாமல் துரத்தும் மழை.. மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை.. சென்னையில் எப்படி?
Weather Update: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 14 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 15,2025 தேதியான இன்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், ஜூன் 15,2025: தென்மேற்கு பருவமழை தொடங்கிய முதல் நீலகிரி, கோவை, தென்காசி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 16 சென்டிமீட்டர் மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர், கோவை மாவட்டம் சின்கோனா, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் எட்டு சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்று பிற்பகலில் நகரின் ஒரு சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இரவு நேரத்தில் சென்னை மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் ,மீனம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, பரங்கிமலை, சின்னமலை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் லேசான முதல் மிதமான மழை பதிவானது.
நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை:
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 15, 2025
இது ஒரு பக்கம் இருக்க மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜூன் 15 2025 தேதியான இன்று நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் அதி கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 16 2025 தேதி ஆன நாளை நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதலில் நீலகிரியில் அதிக அளவு மழை கொட்டி வருகிறது. ஜூன் 18-ஆம் தேதி வரை நீலகிரியில் கனமழை பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில் ஜூன் 15 2025 தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால் இந்த ஆண்டு மே மாதமே அதாவது முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கியதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து நகரின் அனேக இடங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது.