“சொந்தமாகக் கார் இல்லை.. ஆட்டோவில் தான் வர்றேன்!”.. சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்த MLAக்கள்.. தேர்தல் பிரமாணப் பத்திரத்தால் வெளியான உண்மை!
MLAs Claim No Car in Tamilnadu Assembly: சொந்தமாகக் கார் இல்லை, ஆட்டோவில் தான் வருகிறோம்" எனக் கூறி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு வாகனக் கோரிக்கை விடுத்த எம்.எல்.ஏ-க்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களில், அவர்களுக்குச் சொந்தமாக பென்ஸ், எட்டியோஸ், டிகோர் உள்ளிட்ட சொகுசு கார்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 20: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் சொந்த வாகனம் மற்றும் உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அண்மையில் எழுப்பப்பட்டு விவாதப் பொருளானது. தங்களுக்குச் சொந்தமாக கார்கள் இல்லாததால் மக்கள் பணியாற்றவும், சட்டப்பேரவைக்கு வந்து செல்லவும் பல்வேறு சிரமங்களைச் சந்திப்பதாக உறுப்பினர்கள் முன்வைத்த வாதங்களைத் தொடர்ந்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காரின் பராமரிப்புச் செலவுகளுக்காக மாதம் ரூ.75,000 மற்றும் உதவியாளர் நியமனத்திற்காக ரூ.25,000 வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பேரவையில் இருந்த பல எம்.எல்.ஏ-க்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: தென்மாநில முதல்வர்கள் மாநாட்டைப் புறக்கணிக்கிறாரா புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி?.. ஆளுநருக்கு முன்னுரிமை அளித்ததால் சர்ச்சை!
கார் இல்லை என்று கூறிய எம்எல்ஏக்கள்:
முன்னதாகப் பேசிய விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி, தாம் 280 கிலோமீட்டர் தொலைவில் இருந்து சட்டப்பேரவைக்கு வருவதாகவும், சொந்தமாக வாகனம் இல்லாததால் வாடகை வாகனத்திலேயே வந்து செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் தவெக எம்.எல்.ஏ சபரி பேசுகையில், தனக்குக் கார் இல்லாத காரணத்தால் சட்டப்பேரவைக்கு நாள்தோறும் ஆட்டோவிலேயே வந்து இறங்குவதாகவும், அடையாள அட்டையைக் காண்பித்தால் கூடக் காவலர்கள் நம்ப மறுப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் மற்றொரு தவெக எம்.எல்.ஏ சண்முகன், அரசு வழங்கும் காரை ‘இன்னோவா’ காராக வழங்கினால் நன்றாக இருக்கும் என்று பேரவையில் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
பிரமாணப் பத்திரத்தால் வெளிவந்த உண்மை:
ஆனால், தேர்தல் ஆணையத்தில் இவர்கள் தாக்கல் செய்த அதிகாரப்பூர்வப் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தபோது உண்மை நிலை முற்றிலும் வேறாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பேரவையில் கார் இல்லை எனக் கூறி ஆட்டோவில் வருவதாகத் தெரிவித்த தவெக எம்.எல்.ஏ சபரியின் பிரமாணப் பத்திரத்தில், அவருக்குச் சொந்தமாக டாட்டா டிகோர் காரும், இரண்டு இருசக்கர வாகனங்களும் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் வாடகை வண்டியில் வருவதாகக் கூறிய விசிக எம்.எல்.ஏ ஜோதிமணியிடம் டொயோட்டா எட்டியோஸ் கார், ரூ.25 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.50 லட்சம் மதிப்பிலான அசையாச் சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: ஆண்களுக்கும் வேண்டும் ‘Paternity Leave’.. 3-வது குழந்தை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கார்த்தி சிதம்பரம் எம்.பி!!
இன்னோவா கார் கேட்ட தவெக எம்எல்ஏ:
இவற்றுக்கும் மேலாக, அரசு சார்பில் இன்னோவா கார் வேண்டும் எனக் கோரிய தவெக எம்.எல்.ஏ சண்முகத்திடம் இரண்டு மெர்சிடீஸ் பென்ஸ் கார்கள் உட்பட மொத்தம் 4 கார்கள் சொந்தமாக உள்ள தகவல் பிரமாணப் பத்திரத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே சொந்தமாகச் சொகுசு வாகனங்களை வைத்திருந்துகொண்டே, சட்டப்பேரவையில் தங்களிடம் வாகனமே இல்லை என்பது போலப் பேசி அரசுச் சலுகைகளைக் கோரிய எம்.எல்.ஏ-க்களின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே கடும் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.