மத்திய பட்ஜெட்…கவிதை நடையில் கண்டனத்தை பதிவு செய்த கமல்ஹாசன்!
Kamal Haasan MP: மத்திய அரசு தனது 9- ஆவது நிதி நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம். பி. தனது கண்டனத்தை கவிதை மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்களவையில் தாக்கல் செய்தார். கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த நிதி நிலை அறிக்கைக்கு இந்தியாவில் இருக்கின்ற ஒவ்வொரு கட்சியினரும் வரவேற்றும், எதிர்த்தும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பட்ஜெட் குறித்து கவிதை நடையில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எனக்கு தமிழ் கற்பித்த 3 ஆசிரியர்களுள் ஒருவர் கண்ணதாசன். அவர் இந்தியாவின் நிதி நிலை அறிக்கை எப்படி இருக்கும் என்பதை அன்றே யூகித்து பாடல் பாடி உள்ளார்.
மேலும் படிக்க: பொதிகை மலையில் மலையேற்றம், பழவேற்காட்டில் காட்சி மையம்.. தமிழகத்திற்கு பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்புகள்!!




அதில், “பாட்டு ஒன்று பாடு தம்பி பசியை கொஞ்சம் மறந்திருப்போம். பாரதத்தின் தலை நகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி. பாரதத்தின் பெருமை தன்னை பாடு, பாடு சோறு எதுக்கு தம்பி.!
நான் ஆசிரியர்களிடம் இருந்து ஊக்கம் பெறுகிறவன். பல மாமாங்களுக்கு முன்பு ஒரு நிதி நிலையை கண்டு நானும் தமிழில் கவிதை புலம்பியது இந்த தருணத்தில் நினைவில் வருகிறது.
” கள்ளிச்செடி பசுவாகி பால் சுரக்கும் வேப்பம் பூ தேன் எடுக்கும் பண வண்டு வறுமை கதிர் அறுக்கக் கானல் நீர் வாய்க்கால்கள் கற்பனை அறுவடையில் கனவு நெல்மணிகள் தெருவோர ஜமீன்தார்கள் வரி செலுத்த பஞ்ச ராஜ்ஜியம் பரிபாலனம் எங்கும் ஓங்கும்”
எந்த பட்ஜெட்டுக்கும் எங்கள் வரிகள் பொருந்தும்
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நிதிநிலை அறிக்கை என்று கிடையாது. எந்த நிதிநிலை அறிக்கை என்றாலும், எங்களது வரிகள் பொருந்தும் போல் இருக்கிறது என்று எக்ஸ் தளத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம். பி. தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த 2014- ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது. அது முதல், தற்போது வரை 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறது.
எனக்குத் தமிழ் கற்பித்த மூன்று ஆசிரியர்களுள் ஒருவர் கண்ணதாசன். அவர் இந்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதை யூகித்து அன்றே பாடிவைத்தார்.
‘பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசியக் கொஞ்சம் மறந்திருப்போம்.
பாரதத்தின் தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி…
பாரதத்தின் பெருமை தன்னைப் பாடு, பாடு…— Kamal Haasan (@ikamalhaasan) February 1, 2026
நிர்மலா சீதாராமனுக்கு கிடைத்த பெருமை
இந்த 9 நிதிநிலை அறிக்கைகளையும் மத்திய நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அதன்படி, தொடர்ந்து 9 ஆண்டுகளாக மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பெண் அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். அதன்படி, தற்போது அவர் தனது 9- ஆவது மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் படிக்க: மத்திய பட்ஜெட் 2026.. தமிழகத்திற்கு எந்த புதிய திட்டமும் இல்லை.. அரசியல் தலைவர்கள் விமர்சனம்!!