சென்னையில் LPG எரிவாயு தட்டுப்பாடு.. தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்.. வாழ்வாதாரம் பாதிப்பதாக வேதனை!!
LPG crisis: காலை 6 மணிக்கே வரிசையில் நிற்கும் ஓட்டுநர்கள், 9 மணி வரை காத்திருந்தும் எரிவாயு நிரப்ப முடியாமல் தவிக்கின்றனர். பொதுமக்களின் சவாரி அதிகமாக இருக்கும் காலை நேரங்களில் எரிவாயு நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளதால், அன்றாடச் சவாரிகளை மேற்கொள்ள முடியாமல் வருமான இழப்பு ஏற்படுகிறது.
தலைநகர் சென்னையில் ஆட்டோக்களுக்கான எல்.பி.ஜி (LPG) எரிவாயு தட்டுப்பாடு கடந்த 20 நாட்களாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் எரிவாயு நிரப்பப் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களின் அன்றாட வருமானத்தை வெகுவாகப் பாதித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ சுமார் 62 ரூபாய் முதல் 68 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஆட்டோ எல்.பி.ஜி கேஸ், தற்போது 94 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?
மணி கணக்கில் காத்திருப்பு:
சில தனியார் எரிவாயு நிலையங்களில் 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தத் திடீர் விலை உயர்வால், அன்றாட வருமானத்தில் பெரும் பகுதி எரிபொருளுக்கே செலவாவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். விலை உயர்வு ஒரு பக்கம் என்றால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள எரிவாயு நிலையங்கள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளன. சைதாப்பேட்டை போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே எரிவாயு கிடைப்பதால், அங்கு ஒரு கிலோமீட்டருக்கும் மேலாக ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
காலை 6 மணிக்கே வரிசையில் நிற்கும் ஓட்டுநர்கள், 9 மணி வரை காத்திருந்தும் எரிவாயு நிரப்ப முடியாமல் தவிக்கின்றனர். பொதுமக்களின் சவாரி அதிகமாக இருக்கும் காலை நேரங்களில் எரிவாயு நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளதால், அன்றாடச் சவாரிகளை மேற்கொள்ள முடியாமல் வருமான இழப்பு ஏற்படுகிறது.
சர்வதேசக் காரணங்களும் தட்டுப்பாடும்:
இந்த எரிவாயு தட்டுப்பாட்டிற்குப் பின்னால் சர்வதேச அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் காரணமாக எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நீர்நிலை போக்குவரத்துப் பகுதியான ஹார்முஸ் நீரிணை வழியாக எரிவாயு கொண்டு வருவது தடைபட்டுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரத்தைக் காக்க எல்.பி.ஜி ஆட்டோக்களுக்கு மாறிய தங்களுக்கு, இப்போது இங்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். “ஒரு நாள் வருமானம் 1,000 ரூபாய் கிடைத்தால், அதில் 500 ரூபாய் கேஸுக்கே சென்றுவிடுகிறது. மீதமுள்ள பணத்தில் குடும்பச் செலவு, வாடகை, பிள்ளைகளின் படிப்பு என எதையும் சமாளிக்க முடியவில்லை” என ஓட்டுநர்கள் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: 2026 தேர்தல் களம்.. வாக்கு சதவீத உயர்வு யாருக்கு சாதகம்? அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் விவாதங்கள்!
இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, எரிவாயு தட்டுப்பாட்டை நீக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆட்டோ தொழிலாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.