AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கத் தடையில்லை.. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

பாதிக்கப்பட்டோரின் பொருளாதார நிலையைக் கருதி, 32 பேருக்கு நிபந்தனைகளுடன் 'தற்காலிக' அரசு பணி ஆணை வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால அனுமதி அளித்துள்ளது. இது அரசு பணி நியமனம் தொடர்பான விவகாரம் என்பதால், அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் அமைப்பான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (TNPSC) இந்த வழக்கில் ஒரு எதிர்மனுதாரராக நீதிமன்றம் தாமாகவே முன்வந்து சேர்த்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கத் தடையில்லை.. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
கோப்புப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 10 Jul 2026 12:04 PM IST

மதுரை, ஜூலை 10: கரூரில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இன்று தமிழக அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால அனுமதி அளித்துள்ளது. எனினும், இந்த பணி நியமனங்கள் தற்காலிகமானதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. கடந்த ஆண்டு கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் மாநாடு மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கண்டறியப்பட்ட 36 குடும்பங்களில் தகுதியான 32 பேருக்குக் கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கத் தமிழக அரசு முன்வந்தது.

இதையும் படிக்க: 287 நாட்களுக்குப் பின் கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. இவர்களுக்கு மட்டுமே அனுமதி.. அதிரடி பாதுகாப்பு நெறிமுறைகள்!!

நீதிமன்றத்தில் அரங்கேறிய காரசார வாதங்கள்:

இதற்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கரூரில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதன்படி, இன்று இந்த வழக்கு விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவதற்கு முறையான வரையறைகள் இல்லை என்றும், இதற்காகப் புதிய விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார். மேலும், தமிழகத்தில் இதற்கு முன்பாக நடந்த பல்வேறு பேரிடர் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

மனுதாரர் தரப்பு வாதம்:

அதாவது, பல ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமகம் கூட்ட நெரிசல் சம்பவம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்த சம்பவம், தருமபுரியில் அரசியல் காரணங்களுக்காகக் கல்லூரி மாணவிகள் சென்ற பேருந்து எரிக்கப்பட்டு, மாணவிகள் உயிரிழந்த சம்பவம் இப்படியான முந்தைய பெரும் சம்பவங்களின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் கருணை அடிப்படையில் அரசு பணி நியமனங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில், தற்போது கரூரில் ஓர் அரசியல் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மட்டும் எவ்வாறு அரசு வேலை வழங்க முடியும்? என்ற கேள்வியைக் காரசாரமாக முன்வைத்தார்.

நீதிபதிகளின் அதிரடி கேள்வி:

இந்த வாதங்களைக் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், மனுதாரர் தரப்பை நோக்கி, “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவதில் என்ன தவறு இருக்கின்றது?” என்ற தங்களின் முதல் கேள்வியை அதிரடியாக எழுப்பினர். தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் ஏதேனும் முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டதா? என்பது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர்.

நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு:

வழக்கின் இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தற்போதைய பொருளாதார நிலையை முக்கியமாகக் கருத்தில் கொண்டது. கரூரில் உயிரிழந்த 41 பேரில் பெரும்பாலானோர் 30 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் பெண்களும் ஆவர். அவர்கள் அனைவரும் அந்தந்தக் குடும்பங்களின் முதன்மை வருவாய் ஈட்டுபவர்களாக இருந்ததால், அவர்களின் மறைவுக்குப் பின் இக்குடும்பங்கள் கடந்த ஓராண்டாகக் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

எனவே, மனிதநேய அடிப்படையில் இக்குடும்பங்களுக்குப் பணி நியமன ஆணை வழங்குவதை முழுமையாகத் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறி, அரசு பணி வழங்க நீதிபதிகள் இடைக்கால அனுமதி அளித்தனர்.

முக்கிய நிபந்தனைகளை விதித்த நீதிமன்றம்:

இன்று 32 பேருக்குத் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் வழங்கப்படவுள்ள பணி நியமன ஆணைகள் அனைத்தும் ‘தற்காலிகமானவை’ என்ற அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை இவர்களுக்கு வழங்கப்பட்ட பணியை நிரந்தரப் பணியாக மாற்றக் கூடாது. தற்போது வழங்கப்படவுள்ள தற்காலிகப் பணி நியமனங்கள் முழு அளவில் செல்லுபடியாகுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலேயே முடிவாகும்.

குறிப்பாக, இது அரசு பணி நியமனம் தொடர்பான விவகாரம் என்பதால், அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முதன்மை அமைப்பான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (TNPSC) இந்த வழக்கில் ஒரு எதிர்மனுதாரராக நீதிமன்றம் தாமாகவே முன்வந்து சேர்த்துள்ளது.

இதையும் படிக்க: ராஜினாமா செய்த 3 எம்எல்ஏகளிடம் சபாநாயகர் விசாரணை – வெளியான தகவல்

தற்போதைய நிலை:

நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, கரூரில் தற்காலிகப் பணி ஆணைகளைப் பெறுவதில் அரசுக்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் இருந்த சட்டச் சிக்கல்கள் தற்காலிகமாக நீங்கியுள்ளன. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 21-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். அன்று அரசு தரப்பின் முழுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்ட பிறகு, இந்த தற்காலிகப் பணிகளின் எதிர்காலம் குறித்த இறுதி முடிவு தெரியவரும்.

Follow Us