தலைமறைவான பூவை ஜெகன் மூர்த்தி? 4 தனிப்படைகள் அமைத்த சிபிசிஐடி..
MLA Jegan Moorthi: சிறுவன் கடத்தல் வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், 4 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன் 28,2025: புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமறைவாக இருப்பதாகவும் அவரை பிடிக்க நான்கு தனிப்படைகள் சிபிசிஐடி போலீசார் அமைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னையில் நான்கு தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவன் கடத்தல் வழக்கில் ஜூன் 27 2025 அன்று சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தியின் மூன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் தேனீ சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்துள்ளார்.
சிறுவனை கடத்திய விவகாரம்:
திருமணத்திற்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர் அப்போது அவர் அங்கு இல்லாத காரணத்தால் தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று பின்னர் அருகில் இருந்த பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக தனுஷின் தாயார் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்யக்கூடும் என்பதால் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை முன்னதாக நீதிபதி பி வேல்முருகன் முன் வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், இந்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் சரத்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் பூவை ஜெகன் மூர்த்திக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதால் அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
முன் ஜாமின் மனு தள்ளுபடி:
ஏற்கனவே இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மாற்றம் செய்யப்பட்டது. ஜூன் 27 2025 அன்று ஜெயச்சந்திரன் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது பூவை ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தனிப்படை அமைத்து தேடும் பணி:
இந்நிலையில் சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன் மூர்த்தி மூளையாக செயல்பட்டதாக ஏற்கனவே குறிப்பிடப்பட்ட நிலையில் அவர் தற்போது தலைமுறைவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக நான்கு தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.