“மகளிர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்தா?”.. பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!
வரதட்சணை புகாரில் வழக்குப்பதிவு செய்யாமல், காவல் நிலையத்திலேயே கட்டப்பஞ்சாயத்து செய்த தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் ஆகிய இருவருக்கு தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விக்டோரியா கௌரி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை, ஜூலை 11: பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடப்பது மிகுந்த வருத்தமளிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. மகளிர் காவல் நிலையங்களில் செயல்பாடு கவலையளிக்கும் விதித்தில் உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், வரதட்சணை புகாரில் வழக்குப்பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் பெண் துணை ஆய்வாளர் ஆகிய இருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க: சட்டசபையில் ஓட்டம் பிடித்தது யார்?.. “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல!”.. கரூரில் திமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!!
வழக்கின் பின்னணி என்ன?
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை நாக்கல் செய்திருந்தார். அதில், தனது மகளுக்கு பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு மணமகனுடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். திருமணத்திற்காக முன்வைப்பாக (அட்வான்ஸ்) 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மணமகன் வீட்டார் மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டுத் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வீட்டார், தென்காசியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல் துறையின் கட்டப்பஞ்சாயத்து:
புகாரைப் பெற்ற மகளிர் காவல் துறையினர், சட்டப்படி குற்றவழக்கு பதிவு செய்யாமல், காவல் நிலையத்திலேயே வைத்து கட்டப்பஞ்சாயத்து (பேச்சுவார்த்தை) நடத்தியுள்ளனர். மணமகன் வீட்டாரிடமிருந்து பாதிக்கப்பட்ட பெண் வீட்டாருக்கு வெறும் 5 லட்சம் ரூபாயை மட்டும் வாங்கி கொடுத்துவிட்டு வழக்கை முடித்துள்ளனர். தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட மணமகன் வீட்டார் மற்றும் அதற்குத் துணைபோன போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் வீட்டார் நீதிமன்றத்தை நாடினர்.
நீதிபதி விக்டோரியா கௌரியின் கண்டனம்:
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறையின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி கூறியதாவது, “தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ போன்ற புதிய திட்டங்களை அரசு தொடங்கி வரும் வேளையில், ஏற்கனவே இருக்கும் பெண்கள் பாதுகாப்பு அமைப்புகள் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுவது வருத்தமளிக்கிறது. வரதட்சணை புகார் என்பது திட்டவட்டமாகத் தெரிந்தும் வழக்குப்பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து செய்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, சட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய நீதிமன்றம் அனுமதிக்காது”.
நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு:
ரூ.2 லட்சம் அபராதம்: வரதட்சணை புகாரை மறைத்து கட்டப்பஞ்சாயத்து செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் ஆகிய இருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் (மொத்தம் 2 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சித்த மருத்துவமனைக்குச் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: “என் வாழ்நாளில் மறக்க முடியாத ஆறாத வடு கரூர் சம்பவம்!”.. முதல்வர் விஜய் ஆவேச பேச்சு!!
நேரில் ஆஜராக உத்தரவு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டார் கொடுத்த புகாரின் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பதற்கான உரிய காரண விளக்கத்துடன், சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் அதிகாரிகள் இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.