திமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
Vandavasi Murder Case Sentence : திருவண்ணாமலை மாவட்டத்தில் இடத்தகராறில் நிகழ்ந்த கொலையில் வந்தவாசி முன்னாள் தி. மு. க. எம். எல். ஏ உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது .

கொலை வழக்கில் முன்னாள் திமுக எம்எல்ஏவுக்கு ஆயுள் சிறை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், இருசப்பன் ஆகியோருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்தது. இதனால், இருவரிடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்கள் இருவரையும் அழைத்து சமரசம் பேசியுள்ளனர். ஆனால், அவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்த நிலையில், கடந்த 2014 மே 15- ஆம் தேதி முனுசாமி மற்றும் பெருமாள், இருசப்பன் ஆகியோர் இடையே மீண்டும் நிலத்தகராறு தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு கட்டத்தில் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். அப்போது, அங்கு வந்தவாசி முன்னாள் திமுக எம்எல்ஏ கமலக்கண்ணன் மற்றும் மதியழகன், நந்தகோபால், சுதாகரன், துரைமுருகன் ஆகியோர் பெருமாள், இருசப்பனுக்கு ஆதரவாக கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் முனுசாமியை பலமாக தாக்கினர்.
மருத்துவமனையில் உயிரிழந்த நபர்
இதில், முனுசாமி பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக முனுசாமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேலும் படிக்க: அஜித்குமார் கொடூர கொலை வழக்கு… மானாமதுரை டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்.. என்ன காரணம்!
முன்னாள் எம். எல். ஏ. உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை
இதில், பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை ( பிப்ரவரி 26) முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மதுசூதனன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி, முனுசாமி கொலை வழக்கில் தொடர்புடைய வந்தவாசி முன்னாள் திமுக எம்எல்ஏ கமலக்கண்ணன், பெருமாள், இருசப்பன், நந்தகோபால், மதியழகன், துரைமுருகன், சுதாகரன் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரமும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கொலை வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு
இதைத் தொடர்ந்து, இவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் வாகனத்தில் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தவாசி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம். எல். ஏ. உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: நீண்ட வரலாறு கொண்ட கட்சிகளுக்கு அனுமதி தருவதில் என்ன தவறு? தவெகவிற்கு நீதிமன்றம் கேள்வி