திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.. இணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுமா?
அதிமுகவை எடுத்துக் கொண்டால், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், அன்புமணியின் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன. திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இணைந்திருந்த கட்சிகள் தொடர்ந்து உள்ளன. கூடுதலாக மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இணைந்துள்ளன.

கோப்பு புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 27, 2026: அதிமுகவில் உச்சப் பதவியில் இருந்த ஓ. பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாகவே திமுகவுக்கு ஆதரவாகப் பேசிவருகிறார். முன்னாள் முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் இன்று திமுகவில் இணைந்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில் தேர்தல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக மற்றும் அதிமுக மிகவும் வலுவான கட்சிகளாக உள்ளன. போட்டி என்றால் இந்த இரண்டு கட்சிகளுக்கிடையேதான் நிலைமை உள்ளது.
அதிமுகவை எடுத்துக் கொண்டால், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், அன்புமணியின் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன. திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இணைந்திருந்த கட்சிகள் தொடர்ந்து உள்ளன. கூடுதலாக மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இணைந்துள்ளன.
மேலும் படிக்க: அடுத்தது தஞ்சை தான்.. விஜய் மக்கள் சந்திப்பா? நிர்வாகிகள் சந்திப்பா? வெளியான தகவல்..
திமுகவில் இணையும் ஓ. பன்னீர்செல்வம்:
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா மறைந்த பிறகு, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அதிமுகக்குள் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சினைகளின் காரணமாக, ஓபிஎஸ் தனியாக பிரிந்து வந்து ஜெயலலிதா சமாதியில் ‘தர்மயுத்தம்’ தொடங்கினார். பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்றும் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக என இரண்டாகப் பிரிந்து செயல்பட்டன.
மேலும் படிக்க: திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி.. 35+2 கேட்டு காங்கிரஸ் பிடிவாதம்?..
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்:
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், ஓ. பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தனர். ஆனால் கருத்து வேறுபாடுகள் காரணமாக பின்னர் ஓ. பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி அதிமுகவிலிருந்து நீக்கினார்.
அதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ ஒன்றை அமைத்து, பிரிந்து கிடக்கும் அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சி செய்தார். இது தொடர்பாக பலமுறை பொதுவெளியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்கப் போவதில்லை எனத் தெளிவாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு முதல் நடந்து வந்த பேச்சுவார்த்தை:
இதனைத் தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 2025 ஜூலை 21ஆம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டபோது, காலை நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து பேசினார். இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம், “இது மரியாதை நிமித்தமான சந்திப்பே தவிர வேறு எதுவும் இல்லை” என குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த அன்று மாலை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், “திமுக கூட்டணி வலுவாக உள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும்” என சூசகமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில், ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். மேலும், திமுகவில் அவருக்கு முக்கியப் பொறுப்பும் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதாவது, திமுகவில் ‘இணை பொதுச்செயலாளர்’ பதவி ஓ. பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் முக்கிய பங்காற்றிய மற்றும் முக்கியத் தலைவராக விளங்கிய ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைவது, தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.