வெளுக்கும் கனமழை: இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!!
வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்துள்ளது. தொடர்ந்து, இன்று அது மேலும் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருவதால், மக்கள் அவதியடைந்துள்ளனர்.
சென்னை, டிச.04: கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, சென்னையில் இன்று (டிசம்பர் 4) வியாழக்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே அறிவித்துள்ளார். அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தொடர்ந்து, சென்னையில் இருந்து 40 கி.மீ தொலைவில் வலுவிழந்த தித்வா புயல் தாழ்வு மண்டலமாக மையம் கொண்டது. தொடர்ந்து, கடந்து சென்ற பாதையிலேயே மீண்டும் திரும்பி, தமிழகம்- புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து 25 கி.மீ தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. தொடர்ந்து, இன்று, இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தொடர் மழையால் ஸ்தம்பித்த சென்னை.. பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்..
தித்வா புயலால் கனமழை:
தித்வா புயல் காரணமாக சென்னை உள்பட வட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில், குறிப்பாக வட சென்னை மற்றும் திருவள்ளூரில் தான் அதிகளவில் மழை கொட்டித்தீர்த்தது. இவ்வாறு, கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது. தொடர்ந்து, தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் அரசு மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.




இன்று கனமழை எச்சரிக்கை:
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வரும் டிச.9ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவித்துள்ளது.
இதையும் படிக்க : வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தொடரும் கனமழை.. தத்தளிக்கும் சென்னை!
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
இதனிடையே, கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே அறிவித்துள்ளார். அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரதார் அறிவித்துள்ளார். அதேசமயம், இந்த 2 மாவட்டங்களிலும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. தொடர்ந்து, வேறு எந்த மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.