“மக்களுக்காக என்னென்ன செய்தீர்கள்?” அதிமுகவில் விருப்பமனு அளித்தவர்களிடம் இபிஎஸ் கிடுக்குப்பிடி கேள்வி!!
நேர்காணலுக்குப் பின், வேட்புமனு தாக்கல் செய்த அனைவருடனும் ஒன்றாக பேசிய எடப்பாடி பழனிசாமி, “கட்சியின் முடிவை ஏற்று, குறிப்பிடப்படும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு ஆட்சி அமைந்தவுடன் உரிய பதவியிடங்கள் வழங்கப்படும் என்று அவர் உறுதி கூறினார்.
சென்னை, ஜனவரி 10: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேற்று முதல் நேர்காணல் தொடங்கியது. இதனை எடப்பாடி பழனிசாமி நேரடியாக நடத்தி பல முக்கியமான கேள்விகளை எழுப்பினார். அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணி அண்மையில் நடந்து முடிந்தது. அதன்படி, அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதில், 2,000க்கும் மேற்பட்டோர் தங்கள் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி களம் இறங்குமாறு கேட்டு விருப்ப மனு அளித்தனர்.
இதையும் படிக்க: தவெக – தேமுதிக கூட்டணி உறுதி?.. தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்த விஜய்யின் புதிய பிளான்?
அந்தவகையில், விருப்பமனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி அதற்கான நேர்காணலை ஜனவரி 9 முதல் 13 வரை, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதோடு, இந்த நேர்காணலில், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளவர்கள், தொகுதி பற்றிய நிலவரங்கள் மற்றும் வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரங்களை அறிந்த தங்களுக்காக விருப்ப மனு அளித்துள்ளவர்கள் மட்டும், விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல் வருகை தந்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
முதல் நாளே கடுமையான நேர்காணல் தொடக்கம்:
அதன்படி, நேற்று நடைபெற்ற நேர்காணலில் சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட பல சட்டசபை விருப்ப மனுதாரர்கள் கலந்து கொண்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்
துணைப் பொது செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்றனர்.
இபிஎஸ்-ன் கூர்மையான கேள்விகள்
நேர்காணலில் போட்டியிட விரும்பியவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் கேள்வி எழுப்பினார், கட்சியில் எத்தனை ஆண்டுகள் பணியாற்றியுள்ளீர்கள்? கட்சிக்காக நடந்த போராட்டங்களில் எத்தனை முறை பங்கேற்றீர்கள்? மக்களுக்காக என்னென்ன சேவைகள் செய்தீர்கள்? வாய்ப்பு கிடைத்தால் தொகுதி மக்களுக்காக எந்த திட்டப் பணிகளை செய்வீர்கள்? எதிர்கால ஆட்சிக்குத் தேவையான பணிச்சக்தி மற்றும் நம்பிக்கையை வகுப்பதே இந்த நேர்காணலின் நோக்கமெனக் கூறப்பட்டது.
வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் பதவி உறுதி:
நேர்காணலுக்குப் பின் அனைவருடனும் ஒன்றாக பேசிய எடப்பாடி பழனிசாமி, “கட்சியின் முடிவை ஏற்று, குறிப்பிடப்படும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு ஆட்சி அமைந்தவுடன் உரிய பதவியிடங்கள் வழங்கப்படும் என்று அவர் கூறினார். மேலும், கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவர்கள் யாரையும் நான் கைவிட மாட்டேன் என்றும் உறுதியளித்தார்.
இதையும் படிக்க: யாருடன் கூட்டணி?.. “பிரேமலதா தான் துணை முதலமைச்சர்”.. தேமுதிக மாநாட்டில் பரபர!!
இபிஎஸ் கொடுத்த உறுதி:
அடுத்த ஆட்சி அதிமுக தான் என்பதால், மகிழ்ச்சியுடன் செயல்படுங்கள், மக்களிடையே தைரியமாக, பொறுப்புடன் பணியாற்றுங்கள். அஜாக்கிரதையின்றி கவனத்துடன் செயல்படுங்கள் என்று அறிவுறுத்தினார். அதோடு, நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் தமிழகத்தில் அடுத்த ஆட்சியாளர் அதிமுக என்பதில் ஐயமில்லை என்று அவர் மனுதாரர்களிடையே உற்சாகத்தை தூண்டினார்.