உண்ட வீட்டுக்கே இரண்டகம் – சண்முகம் அணியை கண்டித்து அதிமுக பதிவு
ADMK Politics: சொந்த மாவட்டத்தில் செல்வாக்கு இல்லாதவர்கள் எடப்பாடியார் வழங்கிய வாய்ப்பால் வெற்றி பெற்றுவிட்டு, தற்போது அதிகாரத்திற்காக தி.மு.க மற்றும் த.வெ.க-வுடன் ரகசிய பேரம் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கையையும், பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளையும் கைகழுவிவிட்டு சுயநலத்திற்காகச் செயல்படுவது ஈனத்தனமான அரசியல் துரோகமாகும் என அதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த மாவட்டத்தில் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கத் துணிவில்லாதவர்கள், இன்று ஒரு சங்கமாகத் திரண்டு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகின்றனர். கழகத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் இவர்கள், தி.மு.க-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வரும் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளைத் தூக்கிக் கொண்டு அலைவது தான் இவர்களின் “மாபெரும் திட்டமா?” என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே ஊடகங்களில், நீங்கள் மூவர் மட்டும் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்காக மண்டியிட்டு நிற்பதாகச் செய்திகள் வருகிறதே, அதையும் நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? ஆளுங்கட்சியின் கைக்கூலிகளாகச் செயல்படுவதை நீங்களே ஒப்புக்கொண்ட பிறகு, உங்கள் வார்த்தைகளுக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்? என அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியுடனான ரகசிய சந்திப்பும் துரோக அரசியலும்
நேற்று தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தனியாகச் சந்தித்து அரை மணி நேரம் ஆலோனை நடத்தியதன் பின்னணி என்ன என்பதை விளக்க உங்களுக்குத் துணிவிருக்கிறதா? கழகம் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார்? கடந்த தேர்தலில் 1,34,25,260 வாக்குகள் விழுந்தது இரட்டை இலை சின்னத்திற்காகவும், மக்களின் முதல்வராகத் திகழும் எடப்பாடியார் அவர்களின் தலைமைக்காகவுமே தவிர, உங்களைப் போன்ற தனிநபர்களுக்காக அல்ல. எடப்பாடியார் போட்ட பிச்சையில் பதவியைப் பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்வது ஈனத்தனமான செயல் இல்லையா? என அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: ஈபிஎஸ் முதல்வராக முயன்றார்.. நாங்கள் தவெகவுக்கு ஆதரவு – பகீர் கிளப்பிய சி.வி. சண்முகம் குழு
கூட்டணி கட்சிகளுக்கு இழைக்கப்படும் துரோகம்
பா.ஜ.க, பா.ம.க, அ.ம.மு.க போன்ற தோழமைக் கட்சிகளையும், அவர்களை நம்பி நின்ற கோடிக்கணக்கான தொண்டர்களையும் கைகழுவிவிட்டு, அதிகாரப் பசிக்காக நீங்கள் மட்டும் வாழ நினைப்பது அரசியல் தர்மமாகாது. சொந்த மாவட்டத்திலேயே மக்கள் செல்வாக்கு இல்லாத நீங்கள், எடப்பாடியாரின் நிழலில் வளர்ந்துவிட்டு இன்று அவருக்கே எதிராகச் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. உங்களின் இந்த அதிகாரத் திமிரையும், பண்ணையார்தனத்தையும் கழகத் தொண்டர்கள் இன்னும் எத்தனை காலத்திற்குப் பொறுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? என அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை ஆவேசம்
சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!
திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும்…
— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) May 12, 2026
எடப்பாடியாரால் தான் இயக்கம்; தொண்டர்களின் இறுதி முடிவு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களால் தான் இந்த இயக்கம் கட்டுக்கோப்பாகக் காக்கப்பட்டு வருகிறது. எடப்பாடியாரால் தான் தொண்டர்கள், எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள் என்பதே இன்றைய நிதர்சனம். இது ஒருசில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல; இது அடிமட்டத் தொண்டர்களின் இயக்கம். கட்சிக்குச் சோதனை வரும்போதெல்லாம் தொண்டர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. தற்போதும் துரோகிகளைத் தூக்கியெறியத் தொண்டர்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டார்கள் என்பதைத் தலைமைக்கழகம் சார்பில் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.