சரசரவென சாய்ந்த மின் கம்பங்கள்.. சிங்காநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு.. சீரமைப்பு பணியில் மின்துறை ஊழியர்கள்!
Coimbatore Electric Poles Fell Down : கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிங்காநல்லூர் காவல் நிலைய பகுதியல் சாலை ஓரம் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்கள் திடீரென சாய்ந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. பொது மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பங்கள் அடுத்தடுத்து திடீரென சரிந்து விழுந்ததால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணிகளில் மின்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம், திருச்சி சாலையில் சிங்காநல்லூர் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில், சிங்காநல்லூர் காவல் நிலையம் அருகே உள்ள சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்கள் திடீரென எதிர்பாராத விதமாக முறிந்து ஆங்காங்கே சாலைகளில் விழுந்தன.
அடுத்தடுத்து சாய்ந்து விழுந்த மின் கம்பங்கள்
இதில், ஒரு மின்கம்பம் விழுந்த நிலையில், அதில் இருந்து மற்றொரு மின் கம்பத்துக்கு இணைக்கப்பட்டிருக்கும் உயர் அழுத்தம் மின்சார கம்பிகள் அதிக பாரம் மற்றும் இழுவிசை காரணமாக அடுத்தடுத்து வரிசையாக மின் கம்பங்களும் சரசரவென கீழே சரிந்து விழுந்தன. இதனால், சாலை ஓரம் மின்கம்பங்கள் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் மொபெட்டுகள் மீது மின் கம்பிகள் விழுந்ததில் கடுமையாக சேதம் அடைந்தன.
மேலும் படிக்க: தவெக 10 சீட்க்கு மேல் ஜெயிச்சா மீசையை மழிக்கிறேன்.. சவாலை செய்து காட்டிய அதிமுக மாவட்ட செயலர்!
பெரும் அசம்பாவிதம் – உயிர் சேதம் தவிர்ப்பு
அத்துடன், மின் கம்பிகள் விழுந்த அந்த பகுதிகளில் பொதுமக்கள் யாரேனும் இல்லாததாலும், வாகனங்கள் கடந்து செல்லாதாலும் மிகப்பெரிய அசம்பாவிதம் மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக அருகில் உள்ள மின்சார வாரியத்துக்கு அவசர தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பந்தப்பட்ட இடங்களில் உடனடியாக மின்சாரத்தை ஊழியர்கள் துண்டித்தனர்.
போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள்
இதைத் தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின் கம்பங்களையும், மின் கம்பிகளையும் சீரமைத்தனர். தொடர்ந்து, கடுமையாக சேதம் அடைந்த மின் கம்பங்களை அங்கிருந்து அகற்றி, புதிய மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட பகுதியில் சுமார் 6 மின் கம்பங்கள் அடுத்தடுத்து சரிந்து கீழே விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு.. அடுத்தடுத்து கைதாகும் அதிகாரிகள்.. முன்னாள் சார் பதிவாளருக்கு காப்பு!