“தனி தமிழ்நாடு கோரிக்கை தேச துரோகமாகாது”.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து!
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, இந்த தேச துரோக வழக்கை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டார். தனது தீர்ப்பில் அவர் குறிப்பிட்டதாவது, "1967-களில் தமிழரசன் 'தமிழ்நாடு விடுதலைப் படை'யைத் தொடங்கிப் பேசியபோது, அது இந்திய அரசுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டும் செயலாக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் இந்தியா என்பது உள்ளத்தாலும் ஆன்மாவாலும் முழுமையாக ஒன்றிணைந்த ஒரு நாடாகத் திகழ்கிறது."
சென்னை, ஜூலை 04: “தற்போதைய சமூகச் சூழலில், தனி தமிழ்நாடு நாட்டை உருவாக்குவது பற்றி யாராவது பேசினால், அது தேச துரோகமாகாது; மாறாக, அவ்வாறு பேசுபவர்கள் மனநலப் பிரச்சினை உள்ளவர்களாகவே பார்க்கப்படுவார்கள்” என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்துத் தெரிவித்து, சம்பந்தப்பட்ட தேச துரோக வழக்கை ரத்து செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த கீரா (எ) மூர்த்தி மற்றும் தமிழ் பாலா ஆகிய இருவரும் ‘கழகம் பதிப்பகம்’ என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு, சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்ற விழாவில், இளங்கோவன் என்பவர் எழுதிய “தமிழ் தேசிய தலைவர் தமிழரசனின் வாழ்வும் அறமும்” என்ற புத்தகத்தை வெளியிட்டனர்.
இதையும் படிக்க: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரி போலீசார் நிர்பந்தம்.. தவெகவில் இணையக்கோரி அழுத்தம்.. அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!
வழக்கின் பின்னணி:
அந்தப் புத்தகத்தில், கடந்த 1967-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் ‘தமிழரசன்’ என்பவர் ‘தனி தமிழ்நாடு’ அமைய வேண்டும் என்றும், அதற்காக கொரில்லா போர்முறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் முழங்கிய வரலாற்றுத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதன் காரணமாக, சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தினர், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. (வழக்கின் முதன்மைப் பிரதிவாதியான எழுத்தாளர் இளங்கோவன், வழக்கு விசாரணையின் போதே காலமானார்).
உயர்நீதிமன்றத்தில் மனு:
தங்களுக்கு எதிராக பதியப்பட்ட இந்த தேச துரோக வழக்கை ரத்து செய்யக் கோரி, பதிப்பாளர்கள் கீரா மூர்த்தி மற்றும் தமிழ் பாலா ஆகியோர் வழக்கறிஞர் ப. புகழேந்தி மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “மாநிலத்தைப் பிரிப்பது குறித்தும், அதற்காக கொரில்லா போர்முறையைக் கையாள்வது குறித்தும் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பது அப்பட்டமான தேச துரோகம்” என்று வாதிடப்பட்டது.
நீதிபதியின் அதிரடி தீர்ப்பும், முக்கிய கருத்துகளும்:
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, இந்த தேச துரோக வழக்கை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டார். தனது தீர்ப்பில் அவர் குறிப்பிட்டதாவது, “1967-களில் தமிழரசன் ‘தமிழ்நாடு விடுதலைப் படை’யைத் தொடங்கிப் பேசியபோது, அது இந்திய அரசுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டும் செயலாக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் இந்தியா என்பது உள்ளத்தாலும் ஆன்மாவாலும் முழுமையாக ஒன்றிணைந்த ஒரு நாடாகத் திகழ்கிறது.”
“இன்றைய சமூகச் சூழலில், யாராவது ஒரு நபர் தமிழ்நாட்டைத் தனி நாடாகப் பிரிக்க வேண்டும் என்று பேசினால், அதனைப் பொதுமக்கள் யாரும் தேச துரோகமாகவோ அல்லது அரசுக்கு எதிரான வெறுப்பாகவோ எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மாறாக, அப்படிப் பேசுபவருக்கு ஏதோ மனநலப் பாதிப்பு இருக்கிறது என்றுதான் நினைப்பார்கள். இது பொதுமக்களிடையே எந்தவொரு வெறுப்பையும் தூண்டப் போவதில்லை, வெறும் எரிச்சலையே ஏற்படுத்தும்.”
இதையும் படிக்க: கரூர் சம்பவம்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சு.. திமுக எடுத்த திடீர் முடிவு!!
“முக்கியமாக, இந்த புத்தகத்தில் தற்போதைய சூழலில் தனி நாடு கேட்கும் எந்தப் பிரச்சாரமும் செய்யப்படவில்லை. பல தசாப்தங்களுக்கு முன்பு தமிழரசன் என்பவர் என்ன பேசினார் என்ற வரலாற்று நிகழ்வு மட்டுமே இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த கால வரலாற்றை அப்படியே பதிவு செய்வது, தேச துரோகத்தின் கீழ் வராது.” உச்சநீதிமன்றத்தின் ‘எஸ்.ஜி. வோம்பட்கேரே’ வழக்கின் தீர்ப்பை முன்னுதாரணமாகக் காட்டி, தற்போதைய சமூக நிலைக்கு ஒவ்வாத இந்த தேச துரோக வழக்கை ரத்து செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.