ரேஷன் கடைகளில் அரிசி மூட்டை மூலம் நூதன முறைகேடு? கடிவாளம் இட்ட கூட்டுறவு பதிவாளர்!
Ration Shops: தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் முறைகேடு நிகழ்வதை தடுப்பதற்காக அனைத்து துணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் எடை தராசு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள மெஷனில் மென் பொருள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களில் முறைகேடு நடப்பதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதற்கு தீர்வு காணும் வகையில், தற்போது குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகை வைத்து பொருட்களை பெறும் வகையில் மின்னணு எடை தராசுடன் விரல் ரேகை வைக்கும் கருவி இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலில் ரேஷன் கார்டு அந்த இயந்திரத்தில் ஸ்கேன் செய்யப்படும். அதன் பிறகு, அந்த இயந்திரத்தில் குடும்ப உறுப்பினர்களின் பெயர் காண்பிக்கப்படும். பின்னர், அதில் எந்த நபர் ரேஷன் பொருட்கள் வாங்க வந்திருக்கிறாரோ, அவரது பெயரை ரேஷன் கடை ஊழியர் தேர்வு செய்து அந்த நபரின் விரல் ரேகை பதிவு செய்யப்படும். இதன் பின்னர், அந்த குடும்ப உறுப்பினர்களின் வீட்டில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். தற்போது, இந்த நடைமுறையில் புதிய முறைகேடு செய்யப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் நிகழும் புதிய முறைகேடு
இதில், பொருட்கள் வாங்க செல்லும் குடும்ப உறுப்பினர்களுக்கு சுமார் 10 நிமிடங்கள் வரை ஆகிறது. அப்போது, அந்த மின்னணு எடை தராசில் ஒருவருக்கு அரிசி எடை போடப்பட்டு வழங்கப்படுவதற்கு முன்பு, மூட்டை கட்டிய அரிசி அதில் வைக்கப்படுகிறது. இதனை நாம் பல நேரங்களில் பார்த்திருக்கலாம். ஆனால், இதில் ஒரு மர்மம் ஒளிந்துள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அரிசி வாங்கவில்லை என்றாலோ அல்லது அவருக்கு குறைவான அளவு அரிசி வழங்கப்பட்டதோ, சரியான அளவு அரிசி வாங்கப்பட்டதை காண்பிப்பதற்காக ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டுள்ள மூட்டை அரிசி அதில் வைக்கப்படும்.
மேலும் படிக்க: ரயில் பயணிகள் கவனத்திற்கு… இன்று முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் செல்லும் 44 மின்சார ரயில்கள் ரத்து..




கூட்டுறவு சங்க பதிவாளர் வெளிட்ட உத்தரவு
இதன் மூலம், குடும்ப நபருக்கு சரியான அளவு அரிசி வழங்கப்பட்டதாக எடை தராசில் காண்பிக்கப்படும். இதனால், மீதம் இருக்கும் அரிசியை வெளிச்சந்தையில் விற்று விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த முறைகேட்டை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் அனைத்து இணை பதிவாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
மென்பொருள் மாற்றம் செய்யும் பணி
அதில், தமிழகத்தில் உள்ள சில கடைகளில் முறைகேடு செய்யப்பட்டு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் கிடைத்துள்ளது. எனவே, எடை தராசில் பி. ஓ. எஸ். கருவியுடன் இணைப்பதில் முறைகேடு நிகழாமல் இருப்பதற்காக மென்பொருள் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ள எடை தராசுகளின் மாடல் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் விவரங்கள் ஆகியவற்றை அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து… நுரையீரலில் மண் அடைத்ததால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. ஆபத்தான நிலையில் இருவர்!