தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது… யுபிஎஸ்சி-க்கு பட்டியல் அனுப்பி வைப்பு!
Tamil Nadu New DGP: தமிழகத்தின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பட்டியலை தமிழக அரசு சார்பில் யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கான புதிய டிஜிபி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என்று தெரிகிறது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் யார்.
தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு டிஜிபி ஆக இருந்து வந்த சங்கர் ஜிவால் கடந்த 2025- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31- ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து, தமிழகத்தின் பொறுப்பு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மத்தியில் இருந்து கடும் கண்டனம் மற்றும் விமர்சனம் எழுந்தது. இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்காக மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை தமிழக அரசு தேர்வு செய்து அதற்கான பட்டியலை மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைத்திருந்தது. அந்த பட்டியலை ஆய்வு செய்த மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நாங்கள் எதிர்பார்த்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் இடம் பெறவில்லை எனவும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் கடிதம் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், தமிழகத்திற்கான புதிய டிஜிபி நியமன விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
டிஜிபி தேர்வு பட்டியல் யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைப்பு
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கான புதிய டிஜிபி தேர்வு பட்டியலை 2 வாரங்களுக்குள் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் புதிய டிஜிபியை நியமனம் செய்வதற்கான பட்டியலை தமிழக அரசு தயார் செய்தது. அந்த பட்டியலை மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
மேலும் படிக்க: பதற்றமான வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை… தேர்தல் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!




டிஜிபி பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்கள்
இந்த பட்டியலில், மத்திய அரசு பணியில் இருந்து வரும் மகேஷ் குமார் அகர்வால், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான சந்தீப் ராய் ரத்தோர், வெங்கடராமன், வன்னிய பெருமாள், வனீத்தோவ் வாங்கடே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 3 பேரை மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தேர்வு செய்து மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கும். அதில், ஒரு நபரை தமிழக அரசு தேர்வு செய்து மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்து கொள்ளும். இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கான புதிய டிஜிபி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த ஐபிஎஸ் அதிகாரி சீமா அகர்வால் பெயர் நீக்கம்
இதற்கு முன்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த புதிய டிஜிபி தேர்வு பட்டியலில் இருந்து மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சீமா அகர்வாலின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, அவர் வருகிற ஜூன் மாதம் ஓய்வு பெற இருப்பதாலும், புதிதாக நியமனம் செய்யப்படும் டிஜிபிக்கு குறைந்தபட்சம் 6 மாதம் பணி காலம் இருக்க வேண்டும் என்பதாலும் அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க: தவெக மக்கள் சந்திப்பு.. நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றம்.. வேலூரில் 4900 பேருக்கு மட்டுமே அனுமதி..