பதற்றமான வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை… தேர்தல் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!
Tamil Nadu Assembly Election : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சென்னையில் 3 கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்து செல்லுதல், கையாளுதல் என்பன உள்ளிட்டவை தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தமிழகத்தில் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தேதி அடுத்த மாதம் மார்ச் 2 அல்லது 3-ஆவது வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பணி தொடர்புடைய இதர துறையினர் மற்றும் போலீசார் உள்பட சுமார் 1000 பேருக்கு காலை, பிற்பகல், மாலை என 3 கட்டங்களாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்குப் பதிவு மையத்துக்கு எப்படி கொண்டு செல்லுதல், வாக்குப் பதிவு முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு திரும்ப கொண்டு செல்லுதல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்
இதே போல, வாக்குப் பதிவு நடைபெறும் போது, இயந்திரங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதற்கு மாற்று இயந்திரங்கள் வழங்குதல். இந்த பணிகளின் போது நிரப்பக்கூடிய படிவங்கள், பாதுகாப்பு நடவடிக்கை என்பன உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை, குடிநீர், மின் வசதி மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தருமபுரி அருகே பாஜக – விசிகவினர் கடும் மோதல் – இரு தரப்பும் கட்டைகளால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு




பதற்றமான- மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப் பதிவுக்காக மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாட்டுப் பணிகள் குறித்தும், சட்டம்- ஒழுங்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் குழு அண்மையில் தமிழகம் வந்து சென்றது.
தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை
அந்த குழுவானது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர்களுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தமிழகம் வர உள்ளார். இவரது வருகையின் போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், அரசு துறை உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் மனு – என்ன காரணம்?