தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் – முதல்வர் விஜய் உத்தரவு..
இந்த கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் விஜய், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு தமிழில் "மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை" என்றும், ஆங்கிலத்தில் "Major Mukund Varadarajan Road" என்றும் பெயர் சூட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 24, 2026: தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான பிரதான சாலைக்கு, வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் பெயரை சூட்ட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்:
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ராணுவத்தில் திறம்பட பணியாற்றி, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது வீரமரணம் அடைந்து, மரணத்திற்குப் பிறகு இந்திய அரசின் அமைதிக்கால உயரிய வீர விருதான அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றும் வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான பிரதான சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என இந்திய ராணுவத்தின் தென்னிந்தியப் பகுதிகளுக்கான தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, முதல்வர் விஜயை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யை அவதூறாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்.. 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ்..
வெளியிடப்பட்ட அரசாணை:
இந்த கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் விஜய், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு தமிழில் “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” என்றும், ஆங்கிலத்தில் “Major Mukund Varadarajan Road” என்றும் பெயர் சூட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேஜர் முகுந்த் வரதராஜன் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவர் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றினார். பணியின் போது வீரமரணம் அடைந்த அவரது தியாகத்தை கவுரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.