முதல்வர் விஜய்யை அவதூறாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்.. 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ்..
இந்த பேச்சு முதலமைச்சரை அவதூறாக சித்தரிப்பதாகக் கூறி புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆத்தூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழர்களின் சுயமரியாதைக்காகவும் அச்சமின்றி தொடர்ந்து இயங்கி வரும் திமுகவின் உண்மைத் தொண்டனை வழக்குகள் மூலம் அச்சுறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
ஜூன் 24, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியதாக, திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா ராதாகிருஷ்ணன், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.
முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்:
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் ஒரு வியாபாரி. என் கடைக்கு வருபவர் பணம் வைத்துக்கொண்டு பொருள் வாங்க வருகிறாரா அல்லது கடன் வாங்க வருகிறாரா என்பதை அவரது முகத்தை வைத்தே கண்டுபிடித்துவிட முடியும். அதேபோல், முதலமைச்சர் விஜயின் முகத்தைப் பார்க்கும்போது, ‘சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த என்னை ஏன் அரசியலில் மாட்டிவிட்டீர்கள்’ என்று அவரது முகம் தெரிவிப்பது போல உள்ளது” எனக் கூறியிருந்தார்.
மேலும், “முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதியையும் நேரில் சென்று பார்த்து மக்களுக்கு பல நன்மைகளைச் செய்தார். அந்த முதலமைச்சரை யார் என்று கூட பார்க்காமல் மக்கள் தோற்கடித்துவிட்டனர். என்னுடைய பெயர் ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் என்றிருந்தால் எனக்கு வாக்களித்திருப்பார்கள். வெறும் அனிதா ராதாகிருஷ்ணன் என்பதால் வாக்களிக்கவில்லை. விஜய் முட்டி போட்டுக்கொண்டு சென்றார்; அவருக்கு வாக்களிப்பதா, எனக்கு வாக்களிப்பதா என்று மக்கள் நினைத்தார்கள். இப்படி தெரிந்திருந்தால் நாங்களும் தலைகீழாகக் கூட முட்டி போட்டிருப்போம்” எனப் பேசியிருந்தார்.
இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு:
இந்த பேச்சு முதலமைச்சரை அவதூறாக சித்தரிப்பதாகக் கூறி புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆத்தூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழர்களின் சுயமரியாதைக்காகவும் அச்சமின்றி தொடர்ந்து இயங்கி வரும் திமுகவின் உண்மைத் தொண்டனை வழக்குகள் மூலம் அச்சுறுத்த முடியாது.
மக்கள் நலனுக்காக எங்கள் போராட்டம் தொடரும்:
கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழியில் மக்களின் உரிமைகளுக்காகவும் வாழ்வியலுக்காகவும் எங்கள் போராட்டம் தொடரும். எழுத்துரிமை, பேச்சுரிமை, ஜனநாயக உரிமை ஆகிய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை வழக்குகள் மூலம் தடுக்க முடியாது. திருச்செந்தூர் தொகுதி மக்களின் நலனுக்காக எங்கள் போராட்டம் என்றும் தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.