ஆகஸ்ட் 4-ல் டெல்லி பறக்கும் முதல்வர் விஜய்.. பயணத்திற்குப் பின்னால் இருக்கும் மாஸ் பிளான்!!
CM Vijay Delhi visit: தமிழக முதலமைச்சர் விஜய் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அழைப்பை ஏற்று வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அங்கு ராகுல் காந்தி வெளியிடும் புத்தகத்தை அவர் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஜூலை 18: தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் சந்திப்பைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக முதலமைச்சர் விஜய் வரும் ஆகஸ்ட் மாதம் டெல்லிக்கு அரசு மற்றும் அரசியல் ரீதியான பயணத்தை மேற்கொள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மூத்த உறுப்பினருமான வைகோ, நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார்.
மேலும் படிக்க: பிறந்த குழந்தையைப் பார்க்க லஞ்சம் கேட்ட கொடூரம்.. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர் டிஸ்மிஸ்.. ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர்!
டெல்லிக்கு அழைப்பு விடுத்த வைகோ:
இந்தச் சந்திப்பின் போது, டெல்லியில் நடைபெறவுள்ள தனது பிரத்தியேகப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு வைகோ முதலமைச்சருக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். வைகோவின் இந்த அன்பான அழைப்பை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் விஜய், விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார். அதன்படி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அழைப்பை ஏற்று, முதலமைச்சர் விஜய் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி டெல்லிக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு உள்ள புகழ்பெற்ற ‘கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆப் இந்தியா’ அரங்கில் இந்த விழா நடைபெறுகிறது.
புத்தகத்தின் பின்னணி:
நாடாளுமன்றத்தில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க விவாதங்களின் போது வைகோ ஆற்றிய உரைகள் மற்றும் நாடாளுமன்றக் குறிப்புகள் அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாக மதிமுக வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் இந்த விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய இப்புத்தகத்தை முறைப்படி வெளியிடவுள்ளார். இந்த நூலின் முதல் பிரதியை தமிழக முதலமைச்சர் விஜய் பெற்றுக்கொள்ள உள்ளார்.
புகைப்பட்டத்துடன் வைகோவின் பகிர்வு:
இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu சி. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, “VAIKO IN PARLIAMENT” நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்தேன்.
நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பான இந்நூலினை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் @RahulGandhi ராகுல் காந்தி அவர்கள்… pic.twitter.com/jGlK5zFhw0
— Vaiko (@Vaikooffl) July 17, 2026
முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த புகைப்படங்களையும், ஆகஸ்ட் 4 டெல்லி புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி நூலை வெளியிட, முதலமைச்சர் விஜய் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்ள உள்ளார் என்ற விபரத்தையும் வைகோ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: விதிகளை மீறிய அதிகாரிகள்.. நகராட்சி நிர்வாகத் துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
முக்கியத்துவம் பெறும் சந்திப்பு:
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், டெல்லிக்கு மேற்காள்ளும் முக்கியப் பயணங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தேசிய அளவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிட, அதனைத் தமிழக முதல்வர் விஜய் பெற்றுக்கொள்ளும் இந்த நிகழ்வு, எதிர்கால அரசியல் கூட்டணி மற்றும் தேசிய அளவிலான உறவுகளுக்கு ஒரு புதிய அச்சாரம் என்று அரசியல் விமர்சகர்களால் உற்று நோக்கப்படுகிறது.