பிறந்த குழந்தையைப் பார்க்க லஞ்சம் கேட்ட கொடூரம்.. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர் டிஸ்மிஸ்.. ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர்!
Kilpauk GH inspection: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மேற்கொண்ட அதிரடி ஆய்வில், பிரசவ வார்டில் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில் 4 ஊழியர்கள் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டதோடு, குடிநீர் தட்டுப்பாட்டை மாலைக்குள் சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, ஜூலை 17: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், லஞ்சம் கேட்ட 4 மருத்துவ உதவியாளர்கள் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: பழனி நில மோசடி வழக்கு.. சிசிடிவி காட்சிகளை முடக்கி சிபிசிஐடி தீவிர விசாரணை!!
அமைச்சரின் திடீர் விசிட்:
மருத்துவமனையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் குறித்துப் புகார்கள் எழுந்த நிலையில், அமைச்சர் அருண்ராஜ் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பழைய மற்றும் புதிய கட்டடங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, வார்டுகளில் உள்ள நோயாளிகள் மற்றும் சிகிச்சைக்காக வந்த பொதுமக்களிடம் மருத்துவமனை வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
நோயாளிகள் மற்றும் உறவினர்கள் எழுப்பிய புகார்கள்:
அமைச்சரிடம் சிகிச்சைக்கு வந்திருந்த பொதுமக்களின் உறவினர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பிரசவ வார்டில் பணிபுரியும் ஊழியர்கள் குழந்தை பிறந்த தகவலைச் சொல்வதற்கும், குழந்தையைப் பார்க்க உள்ளே செல்வதற்கும் உறவினர்களிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம் கேட்பதாகக் குற்றம் சாட்டினர். அதோடு, மருத்துவமனையில் பொதுமக்களுக்குப் போதிய குடிநீர் வசதி இல்லை என்றும், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் நோயாளிகள் தரப்பில் அமைச்சர் அருண்ராஜிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகளுக்கு டோஸ்: 4 பேர் பணி நீக்கம்!
லஞ்சப் புகார்கள் குறித்து அங்கிருந்த மருத்துவமனை டீன் மற்றும் உறைவிட மருத்துவ அதிகாரி ஆகியோரிடம் அமைச்சர் உடனடியாகக் கேள்வி எழுப்பி விசாரணை நடத்தினார். நேற்றைய தினமே இத்தகைய புகார் தங்களுக்கு வந்ததாகவும், அதன் அடிப்படையில் லஞ்ச விவகாரத்தில் தொடர்புடைய 4 மருத்துவ உதவியாளர்கள் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அமைச்சரிடம் விளக்கமளித்தனர்.
அமைச்சரின் கடுமையான எச்சரிக்கைகள்:
லஞ்சப் புகார்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் அருண்ராஜ் அதிகாரிகளுக்குப் பின்வரும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன்படி, அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்களிடம் எந்தவொரு ஊழியரும் எக்காரணம் கொண்டும் பணம் கேட்கக் கூடாது. குடிநீர் தட்டுப்பாடு குறித்து முழுமையாக ஆய்வு செய்து, இன்றே மாலைக்குள் மருத்துவமனை முழுவதும் உள்ள நிலவரம் குறித்து டீன் மற்றும் ஆர்.எம்.ஓ ஆகியோர் நேரில் பார்வையிட்டு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இதையும் படிக்க: விதிகளை மீறிய அதிகாரிகள்.. நகராட்சி நிர்வாகத் துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தலைமையிலிருந்து எப்போது வேண்டுமானாலும் எந்த அரசு மருத்துவமனைக்கும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். எனவே, அனைத்து ஊழியர்களும் தங்களது பணிகளை ஒழுங்காகவும் நேர்மையாகவும் செய்ய வேண்டும் என்று எச்சரித்தார். அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை மற்றும் உடனடி பணி நீக்க உத்தரவு அரசு மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.