இனி “வந்தே மாதரம்” பாடலை அவமதித்தால் 3 ஆண்டு ஜெயில்.. புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசு!!
Vande Mataram law change: வந்தே மாதரம் தேசிய பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக மாற்றும் வகையில் தேசிய கௌரவச் சட்டம் 1971-இல் திருத்தம் செய்யத் தயாராகியுள்ள மத்திய அரசு, இதற்கான புதிய மசோதாவை எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்திலேயே நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது.
டெல்லி, ஜூலை 17: மத்திய அரசு எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், நமது தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளது. இதற்கான ‘தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா, 2026’ மக்களவையில் தாக்கல் செய்யப்பட பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திருத்தத்திற்கு முன்னதாக, கடந்த ஜூலை 9, 2026 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கும், மத்திய அமைச்சகங்களுக்கும் ஒரு முக்கிய வழிகாட்டுதலை அனுப்பியிருந்தது.
இதையும் படிக்க: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. 75 ரயில் நிலையங்களை திறந்து வைத்த பிரதமர் மோடி..
உள்துறை அமைச்சகத்தின் அதிரடி உத்தரவு:
அதன்படி, அனைத்து அரசு மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதமான ‘ஜன கண மண’ இசைக்கப்படுவதற்கு முன்பாக, தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட வேண்டும் அல்லது பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், வந்தே மாதரம் பாடலின் அனைத்து 6 சரணங்களும் முறைப்படி முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, தற்போது இதற்குச் சட்டப் பாதுகாப்பை வழங்கும் மசோதா கொண்டு வரப்படுகிறது.
வரலாற்றுப் பின்னணியும், சட்டத் தேவையும்:
1971-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம்’ இந்திய தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம் மற்றும் தேசிய கீதம் (ஜன கண மண) ஆகிய மூன்றுக்கு மட்டுமே சட்டரீதியான பாதுகாப்பை வழங்கியது. தேசிய கீதத்தைப் பாடும் போது இடையூறு விளைவித்தால் இச்சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிவகை உள்ளது. பங்கிம் சந்திர சட்டோபாத்யாய எழுதிய புகழ்பெற்ற ‘ஆனந்தமடம்’ (1882) நாவலில் இடம்பெற்ற வந்தே மாதரம் பாடல், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாரக மந்திரமாக விளங்கியது. 1950 ஜனவரி 24-ல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை இதற்கு ‘தேசிய பாடல்’ என்ற அந்தஸ்தை வழங்கியது.
இருப்பினும், முந்தைய மதச்சார்பற்ற அரசுகள் இப்பாடலுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டதாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டி வந்தது. அண்மைக்காலமாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலோ அல்லது குறிப்பிட்ட சில கூட்டங்களிலோ இப்பாடலுக்கு உரிய மரியாதை வழங்கப்படாத சம்பவங்கள் தொடர் சர்ச்சையாக வெடித்தன. இந்தச் சூழலில்தான், இப்பாடலுக்கும் தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்தையும், சட்டப் பாதுகாப்பையும் வழங்க இப்புதிய திருத்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள் மற்றும் தண்டனைகள்:
வந்தே மாதரம் பாடலை யாராவது வேண்டுமென்றே அவமதித்தாலோ, அவமரியாதை செய்தாலோ அல்லது இப்பாடல் கூட்டாகப் பாடப்படும் போது அதற்கு இடையூறு செய்தாலோ அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக மாறும். இக்குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இதர 4 முக்கிய மசோதாக்கள்:
ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், இந்த வந்தே மாதரம் திருத்த மசோதா தவிர மேலும் 4 முக்கிய புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்ய அரசு பட்டியலிட்டுள்ளது. பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகளை இரண்டு ஆண்டுகளுக்குள் பதிவு செய்யத் தவறினால், அதற்கு இனி ‘முதல் வகுப்பு நீதித்துறை நடுவரின்’ ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற கடுமையான விதிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இனிஸ்கிரீன்ஷாட், வாட்ஸ்அப் டிக்கெட் செல்லாது – புதிய விதிகள் சொல்வது என்ன?
வருமான வரி திருத்த மசோதா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்த மசோதா, உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-லிருந்து 37 ஆக அதிகரிக்கும் சட்ட முன்வடிவு. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு திருத்த மசோதா, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா, தொண்டு நிறுவனங்களுக்கான வெளிநாட்டு நிதியுதவிகள் தேசிய நலனுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்படும் மசோதா ஆகிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.