முரண்படும் விசிக தலைவர்கள்.. ஆதிதிராவிடர் துறை பெயர் மாற்றத்தை எதிர்க்கும் திருமாவளவன்.. ஆதரிக்கும் அமைச்சர் வன்னி அரசு! பின்னணி என்ன?
Adi Dravidar welfare department renamed: ஆதிதிராவிடர் நலத்துறையை 'சமூக நீதித்துறை' என்று பெயர் மாற்றம் செய்த தமிழக அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ள நிலையில், இத்துறை அமைச்சர் இது ஒரு தொலைநோக்குப் பார்வை என ஆதரித்துப் பேசியுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஜூலை 17: தமிழ்நாடு அரசு ‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை’ அமைச்சகத்தின் பெயரை, ‘சமூக நீதித்துறை’ எனப் பெயர் மாற்றம் செய்துள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, இந்த விவகாரத்தில் ஆளும் தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே இருவேறு மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகி முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளன. ஆதிதிராவிடர் நலத்துறையைச் ‘சமூக நீதித்துறை’ என்று பெயர் மாற்றம் செய்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிக்க: விதிகளை மீறிய அதிகாரிகள்.. நகராட்சி நிர்வாகத் துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
பெயர் மாற்றத்திற்குத் திருமாவளவன் எதிர்ப்பு:
இது குறித்து அவர் பேசுகையில்: “ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் இப்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ‘சமூக நீதி’ என்பது இட ஒதுக்கீடு பெறும் அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய பொதுவான ஒன்றாகும். இதில் பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகப்பிற்படுத்தப்பட்டோர் (MBC), சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எனப் பல பிரிவினரும் அடங்குவர். எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பிரத்தியேகத் துறையை இப்பெயரில் மாற்றுவது பொருத்தமாக இருக்காது. தமிழ்நாடு அரசு இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.” என அவர் கூறியுள்ளார். இதே கருத்தை விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பியும் சமூக வலைதளங்களில் முன்பே வலியுறுத்தியிருந்தார்.
பெயர் மாற்றத்தை ஆதரிக்கும் துறை அமைச்சர்:
அதே வேளையில், பெயர் மாற்றப்பட்ட இந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் வன்னி அரசு, அரசின் இந்த முடிவிற்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் தனது விளக்கத்தில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதும், அவர்களை மேம்படுத்துவதும் இந்தத் துறையின் நோக்கம். இது முழுமையாகச் சமூக நீதிக்காகப் போராடும் ஒரு துறை என்பதால், ‘சமூக நீதித்துறை’ என்ற பெயர் மாற்றம் மிகவும் பொருத்தமானது. முதலமைச்சர் ஒரு தொலைநோக்குப் பார்வையோடுதான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் திட்டங்கள் எவ்விதத்திலும் மட்டுப்படுத்தப்படாது. இதில் எந்தவித அரசியலும் இல்லை.”
கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மற்றும் தலைவர் திருமாவளவன் ஆகியோரின் எதிர்ப்புக் கருத்துக்கள் பற்றிக் கேள்வி எழுப்பிய போது, “இது குறித்துக் கட்சித் தலைமை விரிவாக ஆலோசித்து இறுதி நிலைப்பாட்டை முறைப்படி அறிவிக்கும்” என்றும் அவர் கூறினார்.
இதையும் படிக்க: நாகர்கோவில் சிறை மரண விவகாரம்.. அரசு நிவாரணங்களை நிராகரித்த குடும்பத்தினர்.. அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!
அரசியல் முக்கியத்துவம்:
கூட்டணிக்குள் முரண்பாடுகள் இல்லை என்று காட்ட முயன்றாலும், ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்ற விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவனின் நேரடி எதிர்ப்பும், அதே துறையின் அமைச்சர் வன்னி அரசின் ஆதரவுக் குரலும் விசிக கட்சிக்குள்ளேயே ஒருவிதக் கொள்கை ரீதியான முரண்பாட்டை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது அடுத்தகட்ட முடிவை எவ்வாறு எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.