சென்னையில் இன்று முதல் மின்சார பேருந்து சேவை.. முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
Electric Bus Service In Chennai: மக்களின் வசதிக்காக ஜூன் 30, 2025 தேதியான இன்று முதல் சென்னை போக்குவரத்து கழகம் தரப்பில் முதல் கட்டமாக 125 மின்சார பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னை, ஜூன் 30, 2025: சென்னையில் ஜூன் 30 2025 தேதியான இன்று முதல் மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முதல் கட்டமாக சென்னை போக்குவரத்து கழகம் தரப்பில் 125 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எரிபொருள் செலவு கட்டுப்படுத்தும் வகையிலும், காற்று மாசை குறைக்கும் வகையிலும் இந்த மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் 1225 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதில் முதல் கட்டமாக 625 மின்சார பேருந்துகளுக்கான ஒப்பந்தமானது தனியார் நிறுவனத்துடன் கையெழுத்தானது. இந்த பேருந்துகளில் 400 பேருந்துகள் குளிர்சாதனம் இல்லாத சாதாரண பேருந்தாகவும், மீதம் இருக்கக்கூடிய 225 பேருந்துகளும் குளிர்சாதனம் பொருத்திய பேருந்துகளாகவும் இயக்கப்பட உள்ளது.
மின்சார பேருந்து சேவை:
முதல் கட்டமாக சென்னையிலிருந்து ஐந்து பேருந்து பணிமனைகளில் இருந்து இந்த மின்சார பேருந்து சேவைகளானது தொடங்கப்பட உள்ளது. சென்னையில் இருக்கும் வியாசர்பாடி, பூந்தமல்லி, பல்லவன் இல்லம், பெரும்பாக்கம் மற்றும் தொண்டையார்பேட்டை ஆகிய பணிமனைகளில் இருந்து இந்த மின்சார பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.
ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர்:
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக வியாசர்பாடி பணிமனையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களால் விரைவில் புதியதாக இயக்கப்பட உள்ள மின்சாரப் பேருந்துகளுக்கான விழா முன்னேற்பாடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட போது.
உடன் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்… pic.twitter.com/lHpV9uNMuj— Sivasankar SS (@sivasankar1ss) June 26, 2025
கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்சார பேருந்து சேவை பணிகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக சென்னை பல்லவன் இல்லம் பேருந்து பணிமனையில் இருந்து 145 பேருந்துகளும், பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 பேருந்துகளும், வியாசர்பாடியில் பணிமனையில் இருந்து 120 பேருந்துகளும், தொண்டியார்பேட்டை பணிமனையில் இருந்து 100 பேருந்துகளும், பெரும்பாக்கத்தில் பணிமனையில் இருந்து 120 பேருந்துகளும் என மொத்தம் 625 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக ஜூன் 30, 2025 தேதியான இன்று 120 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்:
இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். வியாசர்பாடி பணிமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இந்த மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார். சாதாரண பேருந்துகள் போல் இல்லாமல் இந்த மின்சார பேருந்தில் பல்வேறு வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மக்களின் வசதிக்காக தாழ்த்தள படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பேருந்து என்பது அதிகப்படியான வெப்பத்தை உமிழாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி இருக்கைகள், பயணிகள் இருக்கையின் கீழ் மொபைல் சார்ஜிங் பாயிண்ட், லக்கேஜ் வைப்பதற்கான தனி இடங்கள், எல்இடி விளக்குகள், ஆட்டோமேட்டிக் கியர் சிஸ்டம் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது