Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி நோ ரெட் – ஆரஞ்சு அலர்ட்.. வலுவிழக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..

Tamil Nadu Rain Alert: அக்டோபர் 23, 2025 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 அக்டோபர் 2025 அன்று கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழையும், பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி நோ ரெட் – ஆரஞ்சு அலர்ட்.. வலுவிழக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Oct 2025 06:15 AM IST

வானிலை நிலவரம் – அக்டோபர் 23, 2025: 21 அக்டோபர் 2025 அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, 22 அக்டோபர் 2025 தேதியான நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது இன்று, அதாவது அக்டோபர் 23, 2025 அன்று வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை கடந்து நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நல்ல அளவில் கனமழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் குறையும் மழையின் தீவிரம்:

மேலும், அக்டோபர் 23, 2025 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 அக்டோபர் 2025 அன்று கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழையும், பிற இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கனமழை எதிரொலி – தருமபுரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 26, 2025 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகக்கூடும். அதேபோல் அக்டோபர் 27 மற்றும் 28, 2025 ஆகிய இரண்டு நாட்களிலும் மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. தொடர் கனமழையின் காரணமாக வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் 31 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சிவகங்கையில் நாளை முதல் 31 வரை 144 தடை – விவரம் இதோ

வலுவிழக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி:

அதேபோல் வங்கக்கடலில் உருவாகியுள்ள அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 23, 2025 அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி முதலில் புயலாக உருவாகக்கூடும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது அது பலவீனமடைந்துள்ளதாக விளக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.