41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் வெப்பநிலை.. வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என எச்சரிக்கை..
வடக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலக் குளச்சுழற்சி நிலவுகிறது. அதேபோல், சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டலக் காற்றழுத்த தாழ்வு பாதையும் நிலவுகிறது. இதன் காரணமாக, வருகிற நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஏப்ரல் 22, 2026: தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸை கடந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் 41.9°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கரூரில் 40.5°C, திருச்சியில் 39.3°C, திருப்பத்தூரில் 38.6°C, நாமக்கல்லில் 39.9°C, மதுரையில் 39.4°C, ஈரோட்டில் 39.2°C, கோவையில் 38.3°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.
100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை:
சென்னைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.6°C மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.7°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், வரக்கூடிய நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், சில மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், வடக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலக் குளச்சுழற்சி நிலவுகிறது. அதேபோல், சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டலக் காற்றழுத்த தாழ்வு பாதையும் நிலவுகிறது. இதன் காரணமாக, வருகிற நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மழைக்கான வாய்ப்புகள் இருக்கா?
அந்த வகையில், ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதியிலும் இதே நிலை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: டேங்கர் லாரி மீது மோதிய தனியார் பேருந்து… குழந்தை உள்பட 20 பேர் பலத்த காயம்.. மூவருக்கு தீவிர சிகிச்சை!
அதிக வெப்பநிலையுடன் கூடிய ஈரப்பதம் அதிகரிக்கும் சூழலில், கடலோர தமிழகத்தில் சில இடங்களில் ‘ஹீட் இன்டெக்ஸ்’ (உணரப்படும் வெப்பம்) அதிகரித்து அசௌகரியம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நிலவரம் என்ன?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38°C வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28°C வரைவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலையும் ஈரப்பதமும் காரணமாக உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பகல் நேரங்களில் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.