Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த மாவட்டங்களில் பனிமூட்டம் தொடரும்.. படிப்படியாக அதிகரிக்கும் வெப்பநிலை – வானிலை நிலவரம்..

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வறண்ட வானிலையே நிலவும் என்றும், மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் பனிமூட்டம் தொடரும்.. படிப்படியாக அதிகரிக்கும் வெப்பநிலை – வானிலை நிலவரம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Feb 2026 06:25 AM IST

வானிலை நிலவரம், பிப்ரவரி 5, 2026: தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, பிப்ரவரி 5, 2026 தேதியான இன்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தைப் பொருத்தவரையில், கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் லேசான மழை பதிவாகியுள்ளது.

ஏனைய தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவி வந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய நாளில் டெல்டா பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மாநிலங்களவையில் கமல்ஹாசனின் முதல் உரை… என்ன பேசினார் தெரியுமா?

அதிகாலையில் தொடரும் பனிமூட்டம்:

இது ஒரு பக்கம் இருக்க, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்திலிருந்து ஜனவரி மாதம் விலகிய நிலையில், தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. அதேபோல், பகல் நேரங்களில் வெப்பநிலை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், வரக்கூடிய பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பணியின்போது கஞ்சா பயன்படுத்திய காவல்துறையினர்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை:

அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், ஒரு சில மாவட்டங்களில் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், ஒரு சில இடங்களில் மட்டும் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வறண்ட வானிலையே நிலவும் என்றும், மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 34.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, வேலூரில் 33 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 33.4 டிகிரி செல்சியஸ், நாமக்கல்லில் 33.4 டிகிரி செல்சியஸ், மதுரையில் 33.4 டிகிரி செல்சியஸ் மற்றும் கரூரில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொருத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 31.2 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 30.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரக்கூடிய நாட்களில் இந்த அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.