சென்னைக்கு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்.. வெப்பநிலை எப்படி இருக்கும்?
Tamil Nadu Weather Report: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 27, 2026: கடலூர், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து மத்திய மகாராஷ்டிரா வரை, தெலங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக, சுமார் 3.1 கி.மீ. முதல் 4.5 கி.மீ. உயரத்தில் வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக, ஜூன் 27-ஆம் தேதி, அதாவது இன்று, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?
ஜூன் 28-ஆம் தேதி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜூன் 29-ஆம் தேதி, கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஜூன் 30-ஆம் தேதி முதல் ஜூலை 2-ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு பதிவாகி வரும் சூழலில், வெப்பநிலையின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், ஒரு சில பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.
மேலும் படிக்க: டமார்ர்ர் சத்தத்துக்கு எண்டு கார்டு.. ரோடு ரோலர் மூலம் 1,500 சைலன்சர்கள் அழிப்பு.. கோவை ஆணையர் அதிரடி!
100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை:
அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 38.3 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 38.8 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 38 டிகிரி செல்சியஸ், கரூரில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில், நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 37.7 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
வரக்கூடிய நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், அது இயல்பைவிட சற்று அதிகமாகவே இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.