5 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?
வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதியான இன்று கோயம்புத்தூர், திருநெல்வேலி, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1, 2026: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மதுரையில் தொடர்ந்து அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டையில் 38.8 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 38.1 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 38 டிகிரி செல்சியஸ், கடலூரில் 37.8 டிகிரி செல்சியஸ் மற்றும் கரூரில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை:
சென்னையைப் பொறுத்தவரையில், நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 37.6 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மாநில அளவில் இயல்பைவிட அதிகபட்சமாக கரூரில் 4.7 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வரும் நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றாலும், ஒரு சில இடங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்:
வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதியான இன்று கோயம்புத்தூர், திருநெல்வேலி, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2 முதல் 4ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இந்த நிலை ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை நீடிக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாலை நேரத்தில் மழைக்கு வாய்ப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.