மழைக்கு ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் கனமழை.. படிப்படியாக குறையும் வெப்பநிலை..
Tamil Nadu Rain Alert: தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை பெய்து வரும் நிலையில், அதிகபட்ச வெப்பநிலையின் தாக்கமும் படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக, வரக்கூடிய நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம், அக்டோபர் 10, 2025: தமிழகத்தில் வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து தஞ்சாவூரில் 34 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 34.9 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடியில் 34.4 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 35.3 டிகிரி செல்சியஸ், கரூரில் 35 டிகிரி செல்சியஸ், ஈரோடில் 35.8 டிகிரி செல்சியஸ், கோவையில் 34.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 33.8 டிகிரி செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே சமயம், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழ் அடுக்கு சுழற்சி காணப்படுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அக்டோபர் 10, 2025 தேதியான இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: கரூர் செல்ல அனுமதி எதற்கு? அந்த சூழல் தமிழ்நாட்டில் இல்லை – விஜய்க்கு எதிராக கேள்வி எழுப்பிய அண்ணாமலை
அக்டோபர் 11, 2025 தேதியான நாளை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் அக்டோபர் 12, 2025 அன்று கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், அக்டோபர் 13, 2025 அன்று கோவை, நீலகிரி மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ‘கை நம்மைவிட்டு போகாது’ காங்கிரஸ் – தவெக கூட்டணி? உதயநிதி ஸ்டாலின் பளீச்!
படிப்படியாக குறையும் வெப்பநிலை:
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை பெய்து வரும் நிலையில், அதிகபட்ச வெப்பநிலையின் தாக்கமும் படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக, வரக்கூடிய நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வெப்பச் சலனம் காரணமாக மாலையில் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.