படிப்படியாக குறையும் வெப்பநிலை.. இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 20, 2026: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்த சூழலில், கடந்த இரண்டு நாட்களாக வெப்பநிலையின் தாக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பதிவாகி வருகிறது.
அந்த வகையில், சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் கிழக்கு விதர்பா முதல் தமிழகப் பகுதிகள் வரை, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாக ஒரு வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூன் 20ஆம் தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
அதே சமயத்தில், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 21ஆம் தேதியைப் பொருத்தவரையில், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றம்.. சென்னையில் தெலுங்கானா பெண்ணிடம் நகை திருடிய நபருக்கு வலைவீச்சு!
ஜூன் 22ஆம் தேதியைப் பொருத்தவரையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இந்த நிலை வரக்கூடிய ஜூன் 25ஆம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை எப்படி இருக்கும்?
அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், தமிழகத்தில் வரக்கூடிய ஜூன் 23ஆம் தேதி வரை பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டிய வெப்பநிலை நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரையில், கடந்த சில வாரங்களாக 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவான நிலையில், கடந்த இரண்டு முதல் மூன்று நாட்களாக வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், ஒரு சில பகுதிகளில் பரவலாக மழையும் பெய்து வருகிறது.
அந்த வகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.