சென்னை, ஏப்ரல் 28, 2026: தனிநபர் 4.5 லிட்டர் அளவுக்கு மதுபானம் வைத்துக் கொள்ளலாம் என்ற அரசாணையைச் சுட்டிக்காட்டி, புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்தவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவில் விளக்கம் கோரி, தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, கடலூரைச் சேர்ந்த வல்லரசு என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனிநபர் ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற அரசாணையைச் சுட்டிக்காட்டி, வழக்கை ரத்து செய்தது.
வழக்கு பின்னணி என்ன?
இதையடுத்து, புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் அளவுக்கு மதுபானம் கொண்டு வர உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவியது. இதனால் பொதுமக்களிடையே சட்டம் குறித்த குழப்பமும் உருவானது.\
Also Read: அரசுப் பள்ளிகளில் அசுர வேகத்தில் மாணவர் சேர்க்கை.. ஒரே வாரத்தில் ஒரு லட்சத்தை கடந்து சாதனை!
இந்த நிலையில், இந்த உத்தரவு குறித்து தெளிவான விளக்கம் அளிக்க கோரிய மனுவை நாளை அவசரமாக விசாரணைக்கு எடுக்கக் கோரி, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, நீதிபதி எம். நிர்மல்குமார் முன் முறையீடு செய்தார்.
அப்போது அவர், நீதிமன்ற உத்தரவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்துக்கொள்ள அனுமதியளிக்கும் அரசாணை அனைத்து வகை மதுபானங்களுக்கும் பொருந்தாது என்றும் விளக்கமளித்தார். குறிப்பாக, அந்த அரசாணை குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவித்தார்.
புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வர தனி சட்டம்:
மேலும், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் வாங்கப்படும் மதுபானங்களை தமிழக எல்லைக்குள் கொண்டு வருவதற்கு தனித்த சட்ட விதிமுறைகள் உள்ளன என்றும், அவற்றை மீறுவது குற்றமாகும் என்றும் கூறினார்.
பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மதுபானங்களை, மிகக் குறைந்த அளவில் இருந்தாலும், உரிய அனுமதி இன்றி வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என அரசு தரப்பில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இத்தகைய தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுவது சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், நீதிமன்றம் இதற்கு தெளிவான விளக்கம் வழங்க வேண்டியது அவசியம் எனவும் கோரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் முறையீட்டை ஏற்ற நீதிபதி, விளக்கம் கோரிய மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கினார். இந்த வழக்கின் தீர்ப்பு, மாநிலங்களுக்கு இடையிலான மதுபானக் கடத்தல் மற்றும் தனிநபர் வைத்திருக்கும் வரம்பு குறித்து முக்கிய விளக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.