முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்.. தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
சட்டத்தின் படி இது ஒரு தேர்தல் முறைகேடு என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இந்த உரையைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல சிறு குழந்தைகள் தங்கள் பெற்றோர், தாத்தா-பாட்டி மற்றும் உறவினர்களை தவெக-விற்கு வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்தும் வீடியோக்கள் பரவலாகப் பகிரப்பட்டதையும் மனுதாரர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, வாக்காளர்களைக் கவர குழந்தைகளைப் பயன்படுத்தியதாக எழுந்த புகார் மற்றும் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி பதில் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எல்.வாசுகி (39) என்பவர் தனது வழக்கறிஞர் கனிமொழி மதி மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று, மே 4 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளுக்கு முன்பாக, ஏப்ரல் 21 அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.
இதையும் படிக்க: முதல்வர் விஜய்யின் ஆலோசகராக ஜான் ஆரோக்கிய சாமி – விஷ்ணு ரெட்டி நியமனம்?
பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்த குழந்தைகள்?
அந்த இறுதிகட்டப் பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், அங்கு கூடியிருந்த மற்றும் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர், சிறுமியர்களிடம் ஓர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் தவறாமல் தனது கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு (TVK) வாக்களிப்பதை குழந்தைகள் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சரின் இந்த உரை, குழந்தைகளை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும் செயல் என்றும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி இது ஒரு தேர்தல் முறைகேடு என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இந்த உரையைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல சிறு குழந்தைகள் தங்கள் பெற்றோர், தாத்தா-பாட்டி மற்றும் உறவினர்களை தவெக-விற்கு வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்தும் வீடியோக்கள் பரவலாகப் பகிரப்பட்டதையும் மனுதாரர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
பணப்பட்டுவாடா புகார்கள்:
குழந்தைகள் விவகாரம் மட்டுமன்றி, இந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மயிலாப்பூர், ஆவடி, தாம்பரம் மற்றும் ஆலங்குளம், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் பண விநியோகம் தாராளமாக நடந்ததாக அறப்போர் இயக்கம் போன்ற ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் தேர்தல் அதிகாரியிடம் ஏப்ரல் 22 அன்றே ஆதாரங்களுடன் புகார் அளித்தும், அதன் மீது தேர்தல் ஆணையம் எந்தவொரு வெளிப்படையான அல்லது முறையான விசாரணையையும் முடுக்கிவிடவில்லை என்று வாசுகி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த மந்தநிலை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 14, 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின் கீழ் வரும் ‘சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்’ என்ற ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே சிதைப்பதாக உள்ளது என்றும் அவர் வாதிட்டார்.
இதையும் படிக்க : விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு.. அவர்கள் யார்.. யார்.. தெரியுமா!
உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கை ஆராய்ந்த நீதிபதிகள், இக்குற்றச்சாட்டுகள் குறித்து ஆழமான விசாரணை தேவைப்படுவதாகக் குறிப்பிட்டனர். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு. இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் தலைமை அதிகாரி, ஆளும் கட்சியான தவெக, முக்கிய எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட தரப்பினருக்கு நீதிமன்றம் அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கை வருகிற மே 29, 2026க்குள் மீண்டும் பட்டியலிட்டு, அதற்குள் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களது விளக்கங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் கெடு விதித்துள்ளனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.