AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

₹31 லட்சம் பேராசை: சென்னையில் மூதாட்டியை கட்டிப்போட்டு கொன்ற நில புரோக்கர் அதிரடி கைது!

Elderly Woman Murdered: சென்னையில் ரூ. 31 லட்சம் நில முன்பணத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கில், பொன்னம்மாள் என்ற 70 வயது மூதாட்டி கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். மூதாட்டி அந்தப் பணத்தைத் ஏற்கனவே தன் மகள்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்ட நிலையில், பணம் வீட்டில் இருப்பதாகத் தவறாக நினைத்து இக்கொலை அரங்கேறியுள்ளது.

₹31 லட்சம் பேராசை: சென்னையில் மூதாட்டியை கட்டிப்போட்டு கொன்ற நில புரோக்கர் அதிரடி கைது!
மூதாட்டி கொடூரமாக கொலை
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 16 May 2026 14:33 PM IST

சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு துலுக்காத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (70). இவருக்கு ஆறு மகள்கள் உள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதனால் பொன்னம்மாள் வீட்டில் தனியாகவே வசித்து வந்தார். கடந்த மே 14ஆம் தேதி இரவு சுமார் 10 மணி அளவில், இவரது வீட்டிற்கு ஆட்டோவில் வந்த இரு நபர்கள் பெரும் பரபரப்புடன் வீட்டிற்குள் சென்றுவிட்டு, சிறிது நேரத்தில் அவசர அவசரமாக வெளியேறிச் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற வேகம் அந்தப் பகுதியில் ஒரு விபத்தையும் ஏற்படுத்தியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பொன்னம்மாள் முகம் மற்றும் கண்களில் பலத்த காயங்களுடன், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

காவல்துறை விசாரணை மற்றும் உடற்கூறாய்வு

பயங்கர காயங்களுடன் மீட்கப்பட்ட மூதாட்டியை, பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த டி4 புதூர் காவல் நிலைய போலீசார், விரைந்து வந்து மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, மூதாட்டி அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

பின்னணியில் இருந்த ரூ. 31 லட்சம் விவகாரம்

கொலைக்கான காரணம் குறித்துப் போலீசார் நடத்திய விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்தன. உயிரிழந்த பொன்னம்மாள், சூரப்பட்டு பேருந்து நிலையம் அருகே தனக்குச் சொந்தமான ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அண்மையில் விற்றுள்ளார். அதற்கு முன்பணமாகக் கிடைத்த 31 லட்சம் ரூபாயில், தலா 5 லட்சம் வீதம் தனது 6 மகள்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதமிருந்த ஒரு லட்சம் ரூபாயை மட்டும் தன்னிடம் வைத்துள்ளார். இந்த விபரத்தை முழுமையாக அறியாத கொள்ளையர்கள், அந்த மொத்தப் பணத்தையும் திருடும் நோக்கில் வீட்டிற்குள் புகுந்தது தெரியவந்தது.

போலீசாரிடம் சிக்கிய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள்

சிசிடிவி தடயங்களின் அடிப்படையில் சூரப்பட்டைச் சேர்ந்த நில புரோக்கர் பழனி மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் துளசிதாஸ் (51) ஆகிய இருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைதான பழனி தான் பொன்னம்மாளின் நிலத்தை விற்க இடைத்தரகராகச் செயல்பட்டவர் ஆவார். முன்பணமான 31 லட்சமும் வீட்டில் தான் இருக்கும் என்று தவறாகக் கணக்குப்போட்ட பழனி, தனது நண்பருடன் சேர்ந்து இந்த கொடூரக் கொலையைச் செய்துள்ளார். எதிர்பார்த்த பணம் கிடைக்காத ஏமாற்றத்தில், மூதாட்டி அணிந்திருந்த 3 சவரன் தங்க நகைகளை மட்டும் பறித்துச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us