திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ வழக்கில் திடீர் திருப்பம்.. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சீனிவாச சேதுபதி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் விஜய் பிஷ்னோய் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் செயல்பாட்டைத் திகைப்புடன் கவனித்தது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற அதே வேளையில், நீதித்துறையிலும் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ஆர்.சீனிவாச சேதுபதி, திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பனை விட வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையும் படிக்க: “மதுக்கடையை மூடினால் சந்து கடைகள் திறப்பு”.. விளாசிய செளமியா அன்புமணி.. நோட்ஸ் எடுத்த முதல்வர் விஜய்!!
உயர் நீதிமன்றத்தின் சர்ச்சை உத்தரவு:
இந்த வெற்றியை எதிர்த்து, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். குறிப்பாக, தபால் வாக்குகளை எண்ணுவதில் தவறு நடந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை, சீனிவாச சேதுபதி சட்டமன்றத்தில் நடைபெறும் எந்தவொரு நம்பிக்கை வாக்கெடுப்பு அல்லது வாக்கெடுப்பு சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது எனத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
உச்ச நீதிமன்றத்தின் காட்டமான விமர்சனம்:
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சீனிவாச சேதுபதி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் விஜய் பிஷ்னோய் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் செயல்பாட்டைத் திகைப்புடன் கவனித்தது.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் அவையில் வாக்களிப்பதைத் தடுப்பது என்பது மிகக்குறைந்தபட்சமாக சொன்னால் இது ஒரு அட்டூழியம் என்று நீதிபதிகள் விமர்சித்தனர். தேர்தல் முடிவுகளை எதிர்த்து ‘தேர்தல் வழக்கு’ மட்டுமே தொடர முடியும் என்ற நிலையில், உயர் நீதிமன்றம் ஒரு ‘ரிட்’ மனுவை ஏற்றுக்கொண்டு இத்தகைய உத்தரவைப் பிறப்பித்தது எப்படி? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை:
விசாரணையின் முடிவில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு தொடர்பான அனைத்து மேல் நடவடிக்கைகளுக்கும் தடை விதித்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, சீனிவாச சேதுபதி சட்டமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டது. இதனையடுத்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசு இன்று சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிக்க: ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்பப்பெற்றது தமிழக அரசு..