ஞானசேகரனுக்கு தண்டனை என்ன? அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!
Anna University Harassment Case : சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் 2025 மே 28ஆம் தேதியான இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, மே 28 : சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் (anna university harassment case) சென்னை மகளிர் (chennai mahila court) நீதிமன்றம் 2025 மே 28ஆம் தேதியான இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு குற்றவாளி என அறிவிக்கப்படும் பட்சத்தில், தண்டனை விவரங்களை நீதிமன்றம் அறிவிக்கும். சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், தனது சக மாணவருடன் 2024 டிசம்பர் 23ஆம் தேதி இரவு பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அந்த மாணவனை தாக்கிவிட்டு, அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அடுத்த நாள் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து, கோட்டூர்புரம் போலீசார் மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். பல்கலைக்கழக பணியாளர்கள், காவலாளி, விடுதி மாணவர்கள் உள்ளிட்டோரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
மேலும், கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டனர். தீவிர விசாரணைக்கு பிறகு, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பரை போலீசார் பிடித்தனர். இவரை அடையாளப்படுத்தும் விதமாக, வீடியோ கால் மூலம் மாணவிக்கு ஞானசேகரனை அடையானம் காட்டியதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.




ஞானசேகரின் மீது 331(6) (இரவில் அத்துமீறி நுழைதல்), 126(2) (எந்தவொரு நபரையும் தவறாகத் தடுத்து நிறுத்துதல்), 140(4) (கடுமையான காயத்திற்கு ஆளாக்குவதற்காக ஒருவரைக் கடத்துதல், 75(2) (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 64(1) (பாலியல் வன்கொடுமை) ஆகிய பிரிவுகளின் கீழ் பாரதிய நியாய சன்ஹிதா, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் tவழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2024 டிசம்பர் 26ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்று தீர்ப்பு அளிக்கு சென்னை மகளிர் நீதிமன்றம்
இந்த வழக்கை கோட்டூர்புரம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து ஞானசேகரனிடம் ஐபிஎஸ் அதிகாரிகள் பலகட்ட விசாரணைகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து, 2025 பிப்ரவரி மாதம் 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை 3 ஐபிஎஸ் குழு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
ஞானசேரகன் வாக்குமூலம், பாதிக்கப்பட்ட மாணவி அளித்த தகவல்கள் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 30 சாட்சியங்கள், 100க்கும் மேற்பட்ட ஆதாரங்களை சிறப்பு விசாரணை குழு தாக்கல் செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று 2025 மே 28ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.