Ramadoss : அன்புமணி உடனான பிரச்னை சரி செய்யப்படும்.. ராமதாஸ் உறுதி!
PMK Founder Ramadoss Spoke About Anbumani Issue | ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள், பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி விவகாரமாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படும் வகையில், பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன் 08 : அன்புமணி உடனான பிரச்னை சரி செய்யப்படும். சரி செய்தால் தான் தேர்தலை சந்திக்க முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி (PMK – Paatali Makkal Katchi) நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் முன்னாள் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் வெடித்தது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாமகவின் உட்கட்சி விவகாரம் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தனது மகன் உடனான பிரச்னை சரி செய்யப்படும் என ராமதாஸ் கூறியுள்ளது கவனம் பெற்று வருகிறது.
முகுந்தனிடம் ஆலோசனை நடத்திய ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் உடன் ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்து கட்சியின் நிறுவனர் என்ற பெயரில் ராமதாஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஆடிட்டர் குருமூர்த்தியை நேற்று (ஜூன் 07, 2025) சந்தித்த நிலையில், இன்று (ஜூன் 08, 2025) தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் முருகானந்தத்தை அவர் சந்தித்து பேசினார். முகுந்தன் பாமகவின் இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அது குறித்து நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், முகுந்தன் விவகாரம் முடிந்துபோன விஷயம் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவருடன் இன்று ஆலோசனை மேற்கொண்டது அரசியல் களத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்தது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்
குருமூர்த்தி உடனான சந்திப்புக்கு பிறகு ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சரியாக தான் சொல்லி உள்ளார். தற்போது எந்த எதிர் கட்சியையும் குறை சொல்வதற்கான நேரம் அல்ல. நேரம் வரும்போது எந்த கட்சியுடன் கூட்டணி என்பது முடிவு செய்த பிறகு கருத்து சொல்லப்படும் என்று கூறியிருந்தார்.
அப்போது பாமகவை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது என ஆர்.எஸ்.பாரதி முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து ராமதாஸ் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஒவ்வொருவரின் விருப்பம். அவர்களின் மனதில் உள்ளதை எப்படி நடக்க வேண்டும், எப்படி செல்ல வேண்டும் என்பதை உடன் இருந்தால் நன்றாக சொல்வார்கள். இல்லையென்றால் வேறு மாதிரி சொல்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.