அமோனியா வாயு அகற்றும் பணி.. தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு.. பொது மக்கள் என்ன செய்ய வேண்டும் ?
அமோனியா வாயுவை அகற்றும் பணி, தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவின் மேற்பார்வையில், காவல்துறை, வருவாய்த் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, ஊரக வளர்ச்சித் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), சுகாதாரத் துறை மற்றும் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் ஆகிய துறைகளின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஜூலை 3, 2026: திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள செயின்ட் பீட்டர் & பால் சீ ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில், அமோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்றும் பணி ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தொழிற்சாலையைச் சுற்றியுள்ள 500 மீட்டர் சுற்றளவு பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமோனியா வாயு கசிவு – தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு:
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். கவிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சாலையைச் சுற்றியுள்ள 300 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் பொதுமக்கள், தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், கடைக்காரர்கள், பள்ளிகள் மற்றும் வீடுகளில் உள்ள அனைவரும் ஜூலை 3-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 716-ல் செல்லும் வாகனங்கள், கட்டுப்பாட்டு மண்டலத்தைத் தவிர்க்க மாற்று வழிகளில் திருப்பிவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமோனியா வாயுவை அகற்றும் பணி:
அமோனியா வாயுவை அகற்றும் பணி, தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவின் மேற்பார்வையில், காவல்துறை, வருவாய்த் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, ஊரக வளர்ச்சித் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), சுகாதாரத் துறை மற்றும் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் ஆகிய துறைகளின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக கன்னிகைப்பேர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவசரநிலை ஏற்பட்டால் 9952590412 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமோனியா வாயு கசிவு ஏற்பட்டால் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும், உடனடியாக காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மூக்கு மற்றும் வாயை ஈரத்துணியால் மூடிக்கொண்டு, காற்றின் திசைக்கு குறுக்காக நடந்து பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறி, பின்னர் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேநேரத்தில், இந்த மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க: நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு இன்று ஆஜராகாத எ.வ.வேலு.. காரணம் என்ன?
பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு:
இதற்கிடையில், அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் படுகாயமடைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான அளத்தி மகாராணா ஜுவாங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம், திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சில தொழிலாளர்கள் தொடர்ந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.2 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல என்று ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிசா அரசு அறிவித்த ரூ.10 லட்சம் இழப்பீட்டுடன் ஒப்பிடும்போது, தமிழக அரசின் நிவாரணம் மிகவும் குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார்.