“திடீர் சாம்பார், திடீர் இட்லி போல் திடீர் கட்சிகள் வரலாம்”.. டிடிவி தினகரன் அட்டாக்!!
TTV Dhinakaran attacks Sasikala: அந்தவகையில், நேற்று கமுதி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதியக் கட்சியை தொடங்குகிறேன். 9 வருடங்கள் அமைதியாக இருந்ததுபோல, இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் சசிகலா பரபரப்பாக பேசியுள்ளார்.

சசிகலா, டிடிவி தினகரன்
சென்னை, பிப்ரவரி 25: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஜெயலலிதாவின் பிறந்தநாளான நேற்று (பிப்.24) முன்னாள் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் சசிகலா புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட சசிகலா, புதிய கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தினார். அதில், கருப்பு, சிவப்பு வெள்ளை நிறத்துடன் இடையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றுள்ளன. அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கும், கட்சியில் மீண்டும் இணைவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார்.
இதையும் படிக்க: ஆட்சிக்கு வந்தால்.. “ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000”.. அதிமுகவின் அதிரடி வாக்குறுதிகள் இதோ!!
இனி அமைதியாக இருக்க முடியாது:
எனினும், அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில், கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இதையடுத்து, கட்சித் தொடங்கும் முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், நேற்று பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதியக் கட்சியை தொடங்குகிறேன். 9 வருடங்கள் அமைதியாக இருந்ததுபோல இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் பேசியுள்ளார்.
சசிகலாவின் இந்த வருகை, தமிழ்நாடு அரசியலில் குறிப்பாக அதிமுக வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா, கூட்டணியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திடீர் சாம்பார், திடீர் இட்லி:
இந்நிலையில், சசிகலாவின் அறிவிப்பு குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், ஜனநாயக நாட்டில் யாருடைய விருப்பம் எதுவோ, அதைச் செய்யலாம். திடீர் சாம்பார், திடீர் இட்லி வருவது போல திடீர் கட்சிகள் வரலாம் என்று விமர்சித்தார். அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று சொன்னவர்களின் சாயம் இப்போது வெளுத்துவிட்டது. கடந்த 35 ஆண்டு காலமாக எனக்கு மட்டுமே தெரிந்த சில நபர்களின் உண்மை நிலை, இன்று தமிழக மக்களுக்கும் நன்றாகத் தெரிய வந்துகொண்டிருக்கிறது.
மேலும் படிக்க: “உங்கள் வீட்டு பில்லே சாட்சி”.. கையடக்க பிரிண்டருடன் வளம் வரும் அதிமுகவினர்.. திமுகவுக்கு எதிராக புதிய பிரசாரம்..
பதர்களால் எந்தப் பாதிப்பும் இல்லை:
நெல்மணிகள் தோட்டத்தில் விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது; பதர்களால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று குறிப்பிட்டார். காக்கா, குருவிகள் நெல்மணிகளைச் சிலவற்றைத் கொத்திச் செல்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. சீப்பை ஒளித்து வைப்பதன் மூலம் கல்யாணத்தை நிறுத்த முடியாது என்பது போல, அம்மாவின் ஆட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.