இரண்டு அணிகளாக பிரிந்த அதிமுக.. எடப்பாடி பழனிசாமிக்கு 17 எம்.எல்.ஏக்கள்.. வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏக்கள்..
சி.வி. சண்முகம் தலைமையில் இருக்கும் 30 எம்.எல்.ஏ.க்கள், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சூழலில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரண்டு அணிகளாக பிரிந்து சட்டப்பேரவைக்குள் அமர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சென்னை, மே 11, 2026: அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பலரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக, கடந்த சில நாட்களாக அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து செயல்படுவதாக தகவல்கள் வெளியானது. அதாவது, சி.வி. சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏ.க்களும், மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக கூறப்பட்டது.
இரண்டாக பிரிந்த அதிமுக:
இதில் குறிப்பாக, சி.வி. சண்முகம் தலைமையில் இருக்கும் 30 எம்.எல்.ஏ.க்கள், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சூழலில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரண்டு அணிகளாக பிரிந்து சட்டப்பேரவைக்குள் அமர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகலில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்க ஓ.எஸ். மணியன் தலைமையில் வெறும் 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சபாநாயகர் கருப்பையாவிடம் ஆதரவு கடிதம் வழங்கினர். மீதமுள்ள 30 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், சற்று நேரத்திற்கு முன்னதாக எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக சி.வி. சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் ஆதரவு கடிதம் வழங்கியுள்ளனர். சட்டமன்றக் குழுத் தலைவர் வேலுமணி என்றும், கட்சிக் கொறடா சி. விஜயபாஸ்கர் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவா?
இது ஒரு பக்கம் இருக்க, சி.வி. சண்முகம் தலைமையிலான 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக்கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு தர இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் அதிமுக சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, கட்சி தற்போது மீண்டும் இரண்டாக பிரிந்து பிளவுபடும் நிலையை எட்டியுள்ளது. எதிர்த்து முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதன் காரணமாக உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியவுடன் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம், “இவ்வளவு நேரம் பொறுத்துவிட்டீர்கள்; இன்னும் சற்று நேரத்தில் எல்லாம் தெரியவரும்” என சூசகமாக பதிலளித்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.