சென்னை, பிப்ரவரி 24, 2026: தமிழகத்தில் எட்டு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள சூழலில், தமிழகத்தில் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்:
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஆர். ஜெயா, சிறப்பு முயற்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டாக்டர் கே. கோபால் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த சினேகா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக மாற்றப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சார்ஆட்சியராக பணியாற்றி வந்த எஸ். மாலதி ஹெலன், பதவி உயர்வு பெற்று அதே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: நெருங்கும் தேர்தல்.. இன்று முக்கிய முடிவை அறிவிக்கும் சசிகலா.. திட்டம் என்ன?
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த கலைச்செல்வி மோகன், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய சந்திரசேகர் சாகமுரி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் முதன்மை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார்ஆட்சியராக இருந்த ரவிக்குமார், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: பெண் தர மறுத்ததால் ஆத்திரம்.. வீடு புகுந்து காதலி, பாட்டி படுகொலை.. கோவையில் பயங்கரம்!!
நிர்வாகத் தேவைகள் மற்றும் பொதுநலன் கருதி சில மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் புதிய துறைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன், சிலருக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. காலியாக இருந்த முக்கிய பதவிகளுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.